உக்ரைனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளின் குடும்பத்தினர் நாடு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்


உக்ரைனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளின் குடும்பத்தினர் நாடு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்
x
தினத்தந்தி 20 Feb 2022 3:46 PM GMT (Updated: 20 Feb 2022 3:56 PM GMT)

உக்ரைனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளின் குடும்பத்தினரும் நாடு திரும்ப வேண்டும் மத்திய அரசு அறிவுறுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கீவ்

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைனும் அதன் அண்டை நாடான ரஷியாவும் நீண்ட காலமாகவே மோதல் போக்கில் உள்ளன.  உக்ரைனை நேட்டோ அமைப்பில் சேர்க்கக்கூடாது என்கிற ரஷியாவின் கோரிக்கையை அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பு நிராகரித்துவிட்டன. இதன் காரணமாக இந்த மோதல் தற்போது உச்சமடைந்துள்ளது.

உக்ரைன் எல்லையில் ரஷியா சுமாா் 1 லட்சம் படை வீரர்களையும், போர் தளவாடங்களையும் குவித்துள்ளதால் பதற்றம் நிலவி வருகிறது. உக்ரைனை ஆக்கிரமிக்கும் நோக்கத்தில் ரஷியா படைகளை குவித்துள்ளதாக அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதனை ரஷியா மறுத்து வருகிறது.

உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கும் என அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் கணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  உளவுத்துறையின் இந்த எச்சரிக்கையை தொடர்ந்து, உக்ரைனில் இருக்கும் அமெரிக்கர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற வேண்டும் என வெள்ளை மாளிகை அறிவுறுத்தியுள்ளது. 

மேலும் பல நாடுகள் உக்ரைனில் உள்ள தங்கள் நாட்டு தூதர்களை திரும்ப பெற்றதுடன், தங்கள் நாட்டு மக்களையும் உடனே நாடு திரும்ப வேண்டும் என எச்சரித்துள்ளன. இதேபோன்று, அந்நாட்டில் இருக்கும் இந்தியர்கள் உடனே வெளியேற வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியது.  இந்த நிலையில், உக்ரைனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளின் குடும்பத்தினரும் நாடு திரும்ப வேண்டும் மத்திய அரசு அறிவுறுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


Next Story