துருக்கியில் மீண்டும் அடுத்தடுத்து நிலநடுக்கம்: 3 பேர் பலி - 213 பேர் காயம்


துருக்கியில் மீண்டும் அடுத்தடுத்து நிலநடுக்கம்: 3 பேர் பலி - 213 பேர் காயம்
x
தினத்தந்தி 21 Feb 2023 12:16 AM GMT (Updated: 21 Feb 2023 12:23 AM GMT)

துருக்கியில் மீண்டும் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 3 பேர் பலியாகினர். மேலும் 213 பேர் காயமடைந்துள்ளனர்.

அங்காரா,

துருக்கியில் கடந்த 6-ந் தேதி அதிகாலை சிரியா நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ள காசியான்டெப் நகரை மையமாக கொண்டு அதிபயங்கர நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவில் 7.8 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் ஒட்டுமொத்த துருக்கியையும் உலுக்கியது. துருக்கியின் 10 மாகாணங்களை நிலநடுக்கம் உருக்குலைத்துவிட்டது.

வானளவுக்கு கம்பீரமாக உயர்ந்து நின்ற ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் நொடிப்பொழுதில் கட்டிட குவியல்களாக மாறிப்போயின. இந்த துயரம் துருக்கி மட்டும் இன்றி அண்டை நாடான சிரியா வரை நீண்டது. அங்கும் நிலநடுக்கத்தின் பாதிப்பால் பல ஆயிரம் கட்டிடங்கள் இருந்த இடம் தெரியாத அளவுக்கு தரைமட்டமாகின.

இந்த நிலநடுக்கத்தால் இருநாடுகளிலும் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பறிபோயின. பல லட்சம் மக்கள் வீடுகளை இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகளாகினர்.

இதனிடையே துருக்கியில் இதுவரை நிலநடுக்கத்துக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக அந்த நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்திருந்தது. அதேபோல் சிரியாவில் பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்த சூழலில் நிலநடுக்கத்துக்கு பிறகு கிட்டத்தட்ட 2 வார காலமாக தீவிர மீட்பு பணிகள் நடந்து வந்த துருக்கியில் நேற்று மாலையுடன் மீட்பு பணிகள் நிறைவடைந்தன. இந்நிலையில் துருக்கி, சிரியாவில் நேற்று இரவு மீண்டும் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஐரோப்பிய மத்தியதரைக் கடல் நில அதிர்வு மையத்தின் கூற்றுப்படி, ஹடாய் மாகாணத்திற்கு அருகிலுள்ள துருக்கி-சிரியா எல்லைப் பகுதியில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் துருக்கியின் தெற்கு ஹடாய் மாகாணமான அனடோலுவில் ஏற்பட்ட இரண்டு புதிய நிலநடுக்கங்களில் குறைந்தது 3 பேர் கொல்லப்பட்டனர் என்றும் 213 பேர் காயமடைந்துள்ளதாகவும், மூன்று இடங்களில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் துருக்கி உள்துறை அமைச்சர் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.

முன்னதாக நேற்று இரவு 8.04 மணிக்கு ஏற்பட்ட முதல் நிலநடுக்கம் (6.4 ரிக்டர் அளவுகோல்) 16.7 கிலோமீட்டர் (10.4 மைல்) ஆழத்தில் ஏற்பட்டது, இரண்டாவது நிலநடுக்கம் (5.8 ரிக்டர் அளவுகோல்) 7 கிமீ (4.3 மைல்) ஆழத்தில் இருந்தது. இரண்டுமே சுற்றியுள்ள பகுதிகளில் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோரப் பகுதிகளைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சேதமடைந்த கட்டிடங்களிலிருந்து விலகி இருக்குமாறும் பிராந்தியத்தில் உள்ள பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறைந்தது 46,000 பேரை துருக்கி மற்றும் சிரியா நாடுகள் இழந்த வேதனையிலிருந்து இன்னும் மீளாதநிலையில், மற்றொரு நிலநடுக்கம் அந்நாட்டைத் தாக்கி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story