அமெரிக்கா: சர்ச்சில் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம பெண் சுட்டு கொலை


அமெரிக்கா:  சர்ச்சில் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம பெண் சுட்டு கொலை
x
தினத்தந்தி 12 Feb 2024 1:55 AM GMT (Updated: 12 Feb 2024 8:41 AM GMT)

அவரை நோக்கி, பணியில் இருந்த 2 போலீசார் உடனடியாக சுட்டனர். இதில், சம்பவ இடத்திலேயே அந்த பெண் உயிரிழந்து விட்டார்.

ஹூஸ்டன்,

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் 3700 சவுத்வெஸ்ட் பிரீவே என்ற பகுதியில் ஜோயல் ஆஸ்டீன் லேக்வுட் என்ற பெயரில் கிறிஸ்தவ ஆலயம் (சர்ச்) ஒன்று உள்ளது. இந்த ஆலயம் நகரில், மக்கள் பரவலாக கூடும் மற்றும் அதிக பரபரப்பு நிறைந்த பகுதியில் அமைந்துள்ளது. நகரில் அமைந்த மிக பெரிய ஆலயமும் ஆகும்.

இந்நிலையில், ஆலயத்திற்கு 30 முதல் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கையில் குழந்தை ஒன்றுடனும், மற்றொரு கையில் துப்பாக்கியுடனும் நுழைந்துள்ளார். அவர், ஆலயத்தில் நுழைந்ததும் துப்பாக்கியால் சுட தொடங்கினார்.

இதனால் பிரார்த்தனைக்காக கூடியிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து, பாதுகாப்பு பணியில் இருந்த 2 போலீசார் உடனடியாக அவரை நோக்கி சுட்டனர். இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்து விட்டார். அவருடைய கையில் இருந்த 5 வயது கொண்ட குழந்தைக்கு துப்பாக்கி சூட்டில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக குழந்தையை சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இதேபோன்று 57 வயதுடைய நபர் ஒருவரும் காயமடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதுபற்றி ஹூஸ்டன் நகர போலீஸ் அதிகாரியான பின்னர் என்பவர் கூறும்போது, சம்பவ பகுதியிலேயே அந்த பெண் மரணமடைந்து உள்ளார். குழந்தையை சுட்டது யார் என தெரியவில்லை. ஆண் நபரையும் துப்பாக்கியால் சுட்டது யாரென்ற விவரம் வெளிவரவில்லை.

இந்த துப்பாக்கி சூட்டிற்கான பின்னணி பற்றிய விவரம் எதுவும் தெரிய வரவில்லை. குழந்தைக்கும், அந்த பெண்ணுக்கும் என்ன தொடர்பு என்றும் தெரியவில்லை என கூறியுள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


Next Story