பிரான்ஸ்: என் உரிமை... மேலாடை இன்றி தெருவில் சென்ற இளம்பெண் மீது வழக்கு; மக்கள் போராட்டம் வெடிப்பு


பிரான்ஸ்:  என் உரிமை... மேலாடை இன்றி தெருவில் சென்ற இளம்பெண் மீது வழக்கு; மக்கள் போராட்டம் வெடிப்பு
x

பிரான்சில் மேலாடையின்றி தெருவில் சென்ற இளம்பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர்.

பாரீஸ்,

காலநிலை மாற்றம் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் தற்போது சராசரி வெப்பநிலை அதிகரித்துள்ளது. அதன்படி பிரான்ஸ் நாட்டில் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்பநிலை பதிவாகி வருகிறது.

இதனால் வெப்பத்தை தணிப்பதற்காக கடற்கரை போன்ற சுற்றுலா தலங்களுக்கு ஏராளமானோர் படையெடுக்கின்றனர். அதன்படி பிரபல சுற்றுலா தலமான அவுரிலாக் நகரில் ஆயிரக்கணக்கானோர் கூடினர்.

வருடாந்திர தெரு நாடக விழா அப்போது நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக அங்கு வந்திருந்த மரீனா என்ற இளம்பெண் மேலாடையின்றி சென்றார். இதனால் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால் அவரிடம் மேலாடை அணியும்படி போலீசார் வலியுறுத்தினர்.

ஆனால் கோடை வெயில் அதிகமாக இருப்பதாக கூறி மரீனா மேலாடை அணிய மறுத்தார். மேலும் ஆண்களை போல பெண்களும் மேலாடை இன்றி செல்ல உரிமை உள்ளது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போலீசார் பலமுறை வலியுறுத்தியும் மேலாடை அணியாததால் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்தநிலையில் மரீனாவுக்கு ஆதரவாக ஏராளமானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஆண்கள், பெண்கள் என பலரும் மேலாடை இல்லாமல் வீதிகளில் நடந்து சென்றனர். அவர்கள் தங்களது உடல்களில் ஆண், பெண் இருவரும் சமம் என்பன போன்ற வாசகங்களை எழுதிக்கொண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

முதலில் அமைதியாக நடந்த இந்த போராட்டத்தில் சிலர் வன்முறையில் ஈடுபட தொடங்கினர். அப்போது அங்குள்ள நகர கோர்ட்டு முன்பு பிரான்ஸ் நாட்டின் தேசிய கொடியை சிலர் தீயிட்டு கொளுத்தினர். இதனையடுத்து போலீசார் அங்கு தடியடி நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story