பள்ளிக்கூடங்களில் மத ரீதியிலான உடை அணிய தடை - பிரான்ஸ் அரசு அதிரடி


பள்ளிக்கூடங்களில் மத ரீதியிலான உடை அணிய தடை - பிரான்ஸ் அரசு அதிரடி
x
தினத்தந்தி 28 Aug 2023 2:50 AM GMT (Updated: 28 Aug 2023 6:09 AM GMT)

பள்ளிக்கூடங்களில் அபயா எனப்படும் மத ரீதியிலான உடை அணிய பிரான்ஸ் அரசு தடை விதித்துள்ளது.

பாரிஸ்,

பிரான்ஸ் நாட்டில் அரசுப்பள்ளிக்கூடங்களில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் என அனைவரும் தங்கள் மதத்தை வெளிப்படுத்தும் வகையிலான ஆடைகள், அடையாளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், தலைப்பகுதியை மூடும் உடையான ஹெட்ஸ்கர்ப் உடைக்கு 2004ம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தலை முதல் கால் வரை உடல் முழுவதும் மூடும் இஸ்லாமிய உடையை பொது இடங்களில் அணிய 2010ம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டது. அதேபோல், பிரான்ஸ் பள்ளிக்கூடங்களில் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணியவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரான்சில் உள்ள அரசுப்பள்ளிகளில் இஸ்லாமிய மத உடையான அபயா ஆடையை அணியை தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் 4ம் தேதி புதிய பள்ளி ஆண்டு தொடங்குகிறது. அன்று முதல் பிரான்ஸ் அரசுப்பள்ளிகளில் மாணவிகள், ஆசிரியைகள் அபயா ஆடை அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் பள்ளிக்கூடங்களில் அபயா ஆடை அணியும் மாணவிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் அது மதம் சார்ந்த உடை என்பதால் அதை அணிய தடை விதிக்க வேண்டும் என்ற அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பள்ளிகளில் இஸ்லாமிய மத உடையான அபயா ஆடை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. அபயா என்பது இஸ்லாமிய பெண்கள் அணியும் ஆடையாகும். தலை முதல் கால் வரையில் முழுவதும் மூடும் வகையிலான உடையாகும். முகம் மட்டும் தெரியும்படி இந்த உடை வடிவமைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story