இத்தாலி படகு விபத்து: பலி எண்ணிக்கை 61 ஆக உயர்வு - 30 பேரின் கதி என்ன?


இத்தாலி படகு விபத்து: பலி எண்ணிக்கை 61 ஆக உயர்வு - 30 பேரின் கதி என்ன?
x

கோப்புப்படம்

இத்தாலி படகு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 30 பேர் மாயமாகி உள்ளனர்.

ரோம்,

நிலநடுக்கத்தால் பேரழிவை சந்தித்துள்ள துருக்கி நாட்டில் வசித்து வந்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சோமாலியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட அகதிகள் படகு ஒன்றில் ஐரோப்பிய நாடான இத்தாலி நோக்கி புறப்பட்டனர். இந்த படகு நேற்று முன்தினம் இரவு இத்தாலியின் தெற்கு பகுதியில் கலாப்ரியா மாகாணத்தில் உள்ள குரோடோன் நகருக்கு அருகே கடலில் சென்று கொண்டிருந்தபோது, கடல் சீற்றம் காரணமாக அங்கிருந்த பாறைகள் மீது படகு மோதியது.

இதில் படகு உடைந்து கடலில் மூழ்கியது. படகில் இருந்த பெண்கள், குழந்தைகள் உள்பட அனைவரும் நீரில் மூழ்கினர். அவர்களில் சிலர் தாமாக நீந்தி கரை சேர்ந்தனர்.

இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் இத்தாலி கடலோர காவல்படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 30 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். பலர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

இந்த நிலையில் விபத்து நடந்த இடத்தில் இருந்து மேலும் 31 உடல்கள் மீட்கப்பட்டன. இதன் மூலம் பலி எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 30 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை. எனவே பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. எனினும் மாயமானவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story