தாதாபாய் நவ்ரோஜியின் லண்டன் வீட்டுக்கு புதிய கவுரவம்


தாதாபாய் நவ்ரோஜியின் லண்டன் வீட்டுக்கு புதிய கவுரவம்
x

சுதந்திர போராட்ட வீரர் தாதாபாய் நவ்ரோஜியின் லண்டன் வீட்டுக்கு புளூ பிளேக் என்ற புதிய கவுரவம் அளிக்கப்பட்டுள்ளது.

லண்டன்,

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களில் முன் வரிசையில் வைத்து போற்றப்படுகிற தலைவர்களில் ஒருவர் தாதாபாய் நவ்ரோஜி ஆவார். இவர் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராகவும் விளங்கியவர். இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகவும் திகழ்ந்தவர். இவர் இந்தியாவின் முதுபெரும் கிழவர் என்றும் அழைக்கப்பட்டார்.

இவர் தெற்கு லண்டனில் 8 ஆண்டு காலம் வாழ்ந்த வீடு, நீலப்பலகையுடன் ('புளூ பிளேக்') கவுரவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் இந்த நீலப்பலகை நினைவு கவுரவ திட்டம் என்பது, இங்கிலிஷ் ஹெரிடேஜ் தொண்டு நிறுவனத்தால் செயல்படுத்தப்படுகிறது. இது லண்டனில் உள்ள முக்கிய கட்டிடங்களின் வரலாற்று முக்கியத்துவத்தை மதித்து போற்றி கவுரவிக்கிறது.

அந்த வகையில்தான், இந்த ஆண்டு இந்தியாவின் சுதந்திரத்திருநாள் அமுதப்பெருவிழாவையொட்டி, தாதாபாய் நவ்ரோஜியின் லண்டன் இல்லம் நீலப்பலகையுடன் கவுரவிக்கப்பட்டுள்ளது.

தாதாபாய் நவ்ரோஜியின் சிவப்பு செங்கல் வீட்டில் இப்போது ' தாதாபாய் நவ்ரோஜி (1825-1917), இந்திய தேசியவாதி மற்றும் எம்.பி. இங்கு வாழ்ந்தார்' என நீலப்பலகையில் பொறிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இங்கிலிஷ் ஹெரிடேஜ் அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், "நவ்ரோஜி இங்கிலாந்துக்கு 7 பயணங்களை மேற்கொண்டார், லண்டனில் தனது நீண்ட ஆயுளில் 30 வருடங்களுக்கு மேலாக கழித்தார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story