அமெரிக்கர்களை விடுவிக்க தூதரக வழியேயான அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும்: ரஷியா வலியுறுத்தல்


அமெரிக்கர்களை விடுவிக்க தூதரக வழியேயான அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும்:  ரஷியா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 30 July 2022 3:12 AM GMT (Updated: 30 July 2022 3:37 AM GMT)

ரஷியாவால் பிடிபட்ட அமெரிக்கர்களை விடுவிக்க கோரி அந்நாட்டு வெளியுறவு மந்திரியை அமெரிக்க வெளியுறவு மந்திரி அந்தோணி பிளிங்கன் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.



வாஷிங்டன்,



அமெரிக்க வெளியுறவு மந்திரி அந்தோணி பிளிங்கன் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தி பேசும்போது, ரஷியாவால் பிடிபட்டுள்ள அமெரிக்கர்களை விடுவிக்க கோரி, ரஷியாவின் வெளியுறவு மந்திரி செர்கே லாவ்ரவை தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பேசினேன். இந்த பேச்சுவார்த்தை ஏறக்குறைய 25 நிமிடங்கள் வரை நீடித்துள்ளது என கூறியுள்ளார்.

வெளிப்படையாக மற்றும் நேரடியாக நடந்த இந்த பேச்சுவார்த்தையில், அமெரிக்கர்கள் பால் வீலன் மற்றும் பிரிட்னி கிரினர் ஆகிய இருவரையும் விடுவிப்பதற்கு அமெரிக்காவில் உள்ள ரஷியர்களை விடுவிப்பது என்ற பெரிய அளவிலான சிறை கைதிகள் பரிமாற்றத்திற்கு ஒப்புதல் அளிக்கும்படி அழுத்தம் கொடுத்துள்ளோம்.

இந்த பேச்சுவார்த்தையில், கருங்கடல் வழியே பாதுகாப்புடன் தானிய ஏற்றுமதியை நடத்துவதற்கான ஒப்பந்தமும் வெகுவிரைவில் நடைமுறைப்படுத்தப்படும். ஏனெனில் இந்நடவடிக்கையை எதிர்பார்த்து இருக்கிறோம் என பிளிங்கன் கூறியுள்ளார்.

இதேபோன்று, ரஷிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த விவரங்கள் இரு தரப்பிலும் விரிவாக ஆலோசிக்கப்பட்டன. அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகள், இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படுத்தி உள்ளன. ரஷிய உணவு வினியோகத்திற்கான முறையான விதிவிலக்கிற்கு, அமெரிக்க அளித்த வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என லாவ்ரவ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

சிறை கைதிகளை பரிமாற்றம் செய்து கொள்ளும் விவகாரத்தில், ஊடகங்களுக்கு யூக செய்திகளை வெளியிடுவதற்கு ஏற்ற வகையில் இல்லாமல், அமைதியான தூதரக வழியேயான பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா திரும்ப வேண்டும் என ரஷியா வலியுறுத்தி உள்ளது. தவிர, உக்ரைன் போரில் ரஷியாவின் இலக்குகள் முழுமையாக அமல்படுத்தப்படும் என பிளிங்கனிடம் கூறப்பட்டு உள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எனினும், உக்ரைனின் பல பகுதிகளை தொடர்ந்து இணைத்து கொள்ளும் ரஷியாவின் நடவடிக்கைகளை உலக நாடுகள் அங்கீகரிக்காது. இந்த திட்டத்தில் தொடர்ந்து ரஷியா ஈடுபட்டால் கூடுதல் தடைகள் விதிக்கப்பட கூடும் என லாவ்ரவுக்கு பிளிங்கன் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.


Next Story