உலகளவில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது - உலக சுகாதார அமைப்பு


உலகளவில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது - உலக சுகாதார அமைப்பு
x

உலகளவில் கொரோனா தொற்று குறைந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜெனீவா,

உலக சுகாதார அமைப்பு இன்று வெளியிட்டுள்ள வாராந்திர அறிக்கையின்படி, உலக அளவில், மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா தவிர பிற பகுதிகளில் புதிதாக கொரோனா தொற்று பாதிப்புகள் மற்றும் கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

மேலும் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வழக்குகள் 12 சதவீதம் குறைந்து 30 லட்சத்துக்கு அதிகமாகவும், கொரோனா மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 22 சதவீதம் குறைந்து ஏறக்குறைய 7,600 ஆகவும் இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனர் டெட்ராஸ் அதனம் கெப்ரிசியஸ் கூறியதாவது:-

கடந்த ஜனவரியில் உச்சத்தைத் தொட்ட கொரோனா தொற்று தற்போது தொடர்ச்சியான சரிவை சந்தித்து வருகிறது. இது மிகவும் ஊக்கமளிக்கும் ஒரு போக்காகும். இருப்பினும், தொற்றுநோய் இன்னும் முடிவடையவில்லை. பல நாடுகள் கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை கைவிட்டு, கொரோனாவுடன் வாழ முயற்சித்தாலும், எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பணக்கார நாடுகளில் முதன் முதலாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி 18 மாதங்களைக் கடந்து, தேவைகள் குறைந்து போதிய அளவு தடுப்பூசிகள் உள்ள நிலையில், இன்னும் 68 நாடுகளில் 40 சதவீத மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை.

தொற்றுநோய் முடிந்துவிட்டது என்ற கருத்து புரிந்துகொள்ளத்தக்கது, ஆனால் தவறானது. உருமாறிய, ஆபத்தான வைரஸ் எந்த நேரத்திலும் வெளிப்படலாம். மேலும் ஏராளமான மக்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். இவ்வாறு கூறினார்.

மத்திய கிழக்கில் புதிய வாராந்திர கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 19 சதவீதம் உயர்ந்துள்ளது. மேலும் தென்கிழக்கு ஆசியாவில் 1 சதவீதம் அதிகரித்துள்ளது. பிற பகுதிகளில் கொரோனா தொற்று வீழ்ச்சியடைந்துள்ளது. மேற்கு பசிபிக் பகுதியில் இறப்பு எண்ணிக்கை 7 சதவீதம் அதிகரித்துள்ளது.


Next Story