மக்களைக் காக்கும் மதுரைக்கரசி - 27-4-2018 மீனாட்சி திருக்கல்யாணம்


மக்களைக் காக்கும் மதுரைக்கரசி - 27-4-2018 மீனாட்சி திருக்கல்யாணம்
x
தினத்தந்தி 25 April 2018 8:46 AM GMT (Updated: 25 April 2018 8:46 AM GMT)

ஈசனின் திகட்டாத திருவிளையாடல்கள் அறுபத்து நான்கு, தித்திப்பாய் நடைபெற்ற இடம் மதுரை. இருப்பினும் இங்கு ஈசனுக்கு இரண்டாவது மரியாதைதான்.

மதுரையில் நடப்பது மீனாட்சியின் அரசாட்சி. மீனைப் போன்ற கண்களை உடையவள் என்பது ‘மீனாட்சி'யின் பொருள்.

மீன், தன் முட்டைகளை தன்னுடைய பார்வையால் அடைகாத்து, குஞ்சுகளைத் தோன்றச் செய்யும் இயல்புடையது. அதே போல் தன் அருட்பார்வையால் உலக உயிர்களைப் படைத்தும், காத்தும் திருவருள் புரியும் கண்களை உடைய அன்னையை ‘மீனாட்சி’ என்று அழைக்கிறோம்.

தனஞ்செயன் என்ற வணிகன், தன் வியாபாரத்திற்காக சென்றபோது கடம்ப வனமாக இருந்த பகுதியில் இளைப்பாறும் நிலை ஏற்பட்டது. அப்போது அந்த இடத்தில் சிவலிங்கம் ஒன்றும், அதன் அருகில் பொய்கை ஒன்றும் இருப் பதைக் கண்டான். சிவ பக்தனான அந்த வணிகன், ஈசனை வழிபட்டதுடன் இதுபற்றி, அந்தப் பகுதியை ஆண்டு வந்த குலசேகரப் பாண்டியனிடம் தெரிவித்தான். பாண்டியன், வணிகனுடன் குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சிவபெருமானை தரிசித்தார். பின்னர் பொய்கையைச் சுற்றி ஈசனுக்கு கோவில் கட்டினார். மேலும் மதில், அகழி ஆகியவற்றோடு கூடிய பெரிய நகரை அந்த கோவிலைச் சுற்றி நிர்மாணித்தார்.

இதையடுத்து தனது சடைமுடி மேல் மிளிரும் சந்திரனிடம் உள்ள புனித நீரைத் தெளித்து, அந்த நகரைப் புனிதமாக்கினார் சிவபெருமான். அதனால் இந்த ஊர் ‘மதுரை' என்று அழைக்கப்படலாயிற்று. மேலும் சிவபெருமான் தன் கழுத்தில் மாலையாக கிடந்த பாம்பை விட்டு, பாண்டியனுக்கு நகரத்தின் எல்லையைக் காட்டக் கட்டளை இட்டார். அது நகரைச் சுற்றி தன் உடலால் வளைத்து வாயைத் திறந்தது. வாயை அதனுள் வைத்துக்காட்டியது. இதனால் ‘ஆலவாய்' என்ற பெயரும் உண்டாயிற்று.

குலசேகரப் பாண்டியனுக்குப் பிறகு அவரது மகன் மலையத்துவஜ பாண்டியன் ஆட்சிக்கு வந்தான். அவனுடைய மனைவி காஞ்சனமாலை. இவர்கள் குழந்தைப்பேறு வேண்டி புத்திர காமேஷ்டி யாகம் செய்தனர். மலையத்துவஜன் செய்த யாக குண்டத்தில் இருந்து, அம்பிகை, மூன்று வயது குழந்தையாக தோன்றினாள். அந்த குழந்தைக்கு ‘தடாதகை’ என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர்.

தடாதகை எனும் மீனாட்சிக்கு உரிய வயது வந்ததும் மலையத்துவஜன், முடிசூட்டு விழாவைச் சிறப்பாக நடத்தினான். மீனாட்சி பாண்டிய நாட்டின் அரசியாக அரியணையில் அமர்ந்து செங்கோல் செலுத்தினாள். மீனாட்சி கன்னியாக இருந்ததால், பாண்டிய நாடானது ‘கன்னி நாடு' என்றும் அழைக்கப்பட்டது.

மீனாட்சி திக் விஜயம் மேற்கொண்டு, எதிர்த்த மன்னர்களை எல்லாம் போரில் வென்றாள். அவளது வீரத்தின் கீழ் தேவலோகமும் வந்தது. வெற்றியை மேலும் ருசிக்க எண்ணிய மீனாட்சி, அங்கிருந்து சென்றது கயிலை மலைக்கு. தன்னை எதிர்க்கும் நோக்குடன் வந்த மீனாட்சியை நோக்கினார் சிவபெருமான். நேருக்கு நேர் நோக்கிய சிவனின் பார்வையால், அதுவரை வெளிப்படாத அன்னை மீனாட்சியின் பெண்மை வெட்கத்தால் நாணியது.

மீனாட்சியின் அழகில் சொக்கிப் போய் அவளை நோக்கினார் ஈசன்; மண்ணை நோக்கினாள் அன்னை. மீனாட்சி யின் அழகில் சொக்கியதால், இறைவன் ‘சொக்கநாதர்’ என்று அழைக்கப்பட்டார். எப்போதும் பித்தனாய், சுடுகாட்டில் அலைபவனாய், மண்டை ஓடு மாலை அணிந்தவனாய் விளங்கும் ஈசன், மீனாட்சிக்காக அன்று சுந்தரனாய் ஜொலித்த காரணத்தால் ‘சுந்தரேஸ்வரர்’ என்றும் வர்ணிக்கப்பட்டார். மதுரைக்கு வந்து மணந்து கொள்வதாக மீனாட்சியிடம் உறுதி அளித்தார் ஈசன்.

அதன்படி திருமால், பிரம்மா மற்றும் தேவர்கள் புடைசூழ மதுரை சென்று மீனாட்சியை மணந்தார். மதுரையம்பதியை அன்னை மீனாட்சியே ஆட்சி செய்ய அருள்புரிந்தார் சிவபெருமான். திருமண விருந்திற்காக பல்லாயிரக்கணக்கானோர் சாப்பிடும் அளவுக்கு உணவு தயார் செய்திருந்தார் அன்னை மீனாட்சி. ஆனால் சிவபெருமான் தரப்பில் வந்தவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. இதனால் அன்னை, ‘திருமணத்திற்காக வெகு சிறப்பாக உணவுகளை தயார் செய்திருந்தேன். உங்கள் பக்கம் இவ்வளவு குறைவாக ஆட்கள் இருக்கிறார்களே, உணவு அனைத்தும் வீணாகப் போகிறது!' என்று கூறினார்.

அந்தப் பேச்சில், தான் தயாரித்த உணவுகளை உண்ணும் அளவுக்குக்கூட ஈசன் பக்கம் ஆட்கள் இல்லையே என்னும் வகையிலான ஏளனமும், தன் வீட்டைப் பற்றிய பெருமையும் கலந்திருந்தது.

அப்போது ஈசன், ‘என்னுடன் வந்துள்ளவர்களில் குண்டோதரனுக்கு மட்டும் நீங்கள் உணவளித்து உபசரித்தால் போதும். நானும் என்னுடன் வந்தவர்களும் மகிழ்ச்சி அடைவோம்' என்று கூறினார்.

அதன்படி உணவு பரிமாறப்பட்டது. சமைத்து வைத்த அனைத்து உணவையும், குண்டோதரன் மட்டுமே உண்டு விட்டான். அப்படியும் அவன் பசி தீரவில்லை. ‘எனக்கு இன்னும் உணவு வேண்டும்' என்று பசியில் கத்தினான். மேலும், உணவு சாப்பிட்டதால் ஏற்பட்ட தாகம் தீர தண்ணீர் கேட்டான். தண்ணீர் கொண்டு வந்து தரப்பட்டது. மதுரை நகரில் இருந்த அனைத்து தண்ணீரையும் குடித்தும் அவனுக்கு தாகம் நிற்கவில்லை. பசியும் நீங்கவில்லை. பரிதவித்து போனாள் மீனாட்சி.

கடைசியில் ஈசனிடமே தன்னை காத்தருளும் படி வேண்டினாள். அவர் குண்டோதரனை அங்கிருந்த ஒரு பகுதிக்கு அழைத்துச் சென்று, ‘மணலில் வை கை' என்று கூறினார். குண்டோதரன் அந்த இடத்தில் கையை வைத்ததும், நதி ஒன்று பிரவாகம் எடுத்து ஓடியது. அந்த நீரை அருந்தியதும் குண்டோதரனின் பசியும், தாகமும் முற்றிலும் தீர்ந்து போனது. அந்த நதியே ‘வைகை’ என்று அழைக்கப்படும் நதியாகும்.

மதுரை மாப்பிள்ளையான சிவபெருமான், சுந்தரபாண்டியன் என்றப் பெயருடன் மதுரையை ஆட்சி செய்வதில் அன்னை மீனாட்சிக்கு உறுதுணையாக இருந்து வந்தார். ஈசனுக்கும், அம்பிகைக்கும் முருகப்பெருமானின் அம்சமாக உக்கிரபாண்டியன் என்ற மகன் பிறந்தார். அவருக்குப் பட்டம் சூட்டி விட்டு, அம்மையும் அப்பனும் கயிலாயமலைக்கு திரும்பினர். அதுமட்டுமல்ல இங்கு மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரராக திருக்கோவில் கொண்டனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வடக்கு வாசல் கோபுரம், வெகுகாலம் வரை மொட்டை கோபுரமாக இருந்தது. இதனை நாட்டுக் கோட்டை நகரத்து வணிகர்கள் கோபுரமாக கட்டினார்கள். மொட்டைக் கோபுரத்தின் அடியில் பாண்டி முனி என்னும் முனீஸ்வரர் சன்னிதி உள்ளது. சுருட்டு படையலே இவருக்கு பிரதானம்.

கிழக்கு கோபுரத்தின் அடியில் மதுரைவீரனுக்கு தனிச் சன்னிதி உள்ளது. வடக்கு கோபுரத்தின் வடக்கு பகுதியில் தல மரமான கடம்ப மரம் உள்ளது. இந்த தல கீழ் திசையில் அஷ்டசக்தி மண்டபம், மீனாட்சி மண்டபம், முதலி மண்டபம் அமைந்துள்ளன. கோவிலில் அர்த்த மண்டபத்தை கடந்ததும் கருவறையில் பச்சை வண்ணத்தில், மதுரை மீனாட்சி ஒரு கையை தொங்க விட்டபடியும், மற்றொரு கரத்தில் கிளியை தாங்கியபடியும் கிழக்கு நோக்கிய வண்ணம் அருள்பாலிக்கிறார். தன் அன்பர்களுக்கு பதினாறுவகை பேறுகளையும் அள்ளிவழங்கும் அரசியாய் மீனாட்சி அம்மன் விளங்குகிறாள்.

அன்னையை வணங்கிய பின்னர், சுவாமி சன்னிதிக்கு கிளிக்கூட்டு மண்டபம் வழியாக நடுக்கட்டுக் கோபுர வாசலை கடந்து செல்லும் போது நம்மை எதிர்நோக்கி அருள்பவர் முக்குறுணி விநாயகர். ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்ட இந்த விநாயகரின் உயரம் எட்டு அடி. விநாயகர் சதுர்த்தி அன்று இவருக்கு 18 படி அரிசியால் செய்யப்பட்ட கொழுக்கட்டை படைக்கப்படும். விநாயகரை கடந்ததும் வரும் தூணில் ஆஞ்சநேயர் ஒரு புறமும், அவருக்கு நேர் வலபுறம் உள்ள தூணில் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் நடப்பது போன்ற சிற்பமும் வடிக்கப்பட்டுள்ளது. இந்த பிள்ளைப்பேறு சிலைக்கு விளக்கெண்ணெய் பூசி, வஸ்திரம் சாற்றி வழிபட்டால் சுகப்பிரசவம் நிச்சயம் என்பது நம்பிக்கை.

அதற்கடுத்தாற் போல் இருப்பது சுந்தரேஸ்வரர் சன்னிதி. சுவாமியின் கருவறையை யானைகள் தாங்கி நிற்கின்றன. கிழக்கு நோக்கிய சுவாமி சன்னிதியின் முன் மண்டபத்தின் இடது ஓரத்தில் வெள்ளியம்பலம் உள்ளது. இங்கு நடராஜர் கால் மாறி ஆடியிருப்பது சிறப்பாகும். சுந்தரேஸ்வரர் சன்னிதியின் பிரகார வலத்தில் வந்திப் பாட்டி, சரஸ்வதி அம்மன், துர்க்கை அம்மன், எல்லாம் வல்ல சித்தர், பைரவர் சன்னிதிகளும் உள்ளன.

சிறப்புமிக்க இந்த மதுரையில் சித்திரை மாதம் வளர்பிறையில் 12 நாட்கள் திருவிழா நடைபெறும். இதில் எட்டாம் நாள் இரவில் ‘மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்', ஒன்பதாம் நாள் இரவில் ‘மீனாட்சி திக்விஜயம்', பத்தாம் நாள் அன்று காலையில் ‘மீனாட்சி திருக்கல்யாணம்' நடைபெறும். பதினொன்றாம் நாள் அன்று தேரோட்டம், பன்னிரெண்டாம் நாளான சித்ரா பவுர்ணமி அன்று சுவாமி அம்பாள் தீர்த்தவாரி வைகை ஆற்றில் நடைபெறும். அன்றுதான், வைகை ஆற்றில் கள்ளழகர் மண்டூக மகரிஷிக்கு திருக்காட்சி தருகிறார்.

Next Story