கேட்ட வரம் அருளும் கேதார கவுரி விரதம்


கேட்ட வரம் அருளும் கேதார கவுரி விரதம்
x
தினத்தந்தி 7 Nov 2018 12:18 PM GMT (Updated: 7 Nov 2018 12:18 PM GMT)

7-11-2018 அன்று கேதார கவுரி விரதம். ஆணுக்குப் பெண் சரிநிகர் என்ற சமத்துவத்தை, முதன் முதலில் செயல்படுத்தியவர் சிவபெருமான்.

சிவபெருமான் தனது உடலில் சரிபாதியை பார்வதிதேவிக்குத் தந்து, ‘அர்த்தநாரீஸ்வரர்’ என்ற வடிவம் கொண்டார் என்கிறது புராணங்கள்.

சிவபெருமானிடம் இடப் பாகம் வேண்டி, பார்வதி தேவி இருந்த விரதமே ‘கேதாரீஸ்வரர் விரதம்’ என்றும், பார்வதிக்கு கவுரி என்ற இன்னொரு பெயர் இருப்பதால் ‘கேதார கவுரி விரதம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

கயிலாயத்தில் சிவபெருமானும் பார்வதி தேவியும் வீற்றிருக்கும் வேளையில், சூரியன், சந்திரன், பிரம்மா, விஷ்ணு முதலான முப்பத்து முக்கோடி தேவர்கள்; தும்புரு, நாரதர், சனகாதி முதலான முனிவர்கள், அட்டவசுக்கள் முதலான யாவரும் தினமும் கூடி, பார்வதி - பரமேஸ்வரனை வணங்கிச் சென்றனர். ஆனால் பிருங்கி முனிவர் மட்டும், பார்வதியைத் தவிர்த்து, சிவபெருமானை மட்டுமே தரிசித்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இது பலமுறை நிகழ்ந்தது. ஒரு நாள் அம்பிகை, சிவபெருமானை நெருங்கி அமர்ந்து கொண்டார். இந்த முறை பிருங்கி முனிவர், வண்டு உருவம் எடுத்து சிவனுக்கும், பார்வதிக்கும் இடையில் புகுந்து, ஈசனை மட்டுமே வழிபாடு செய்து சென்று விட்டார்.

கோபம் கொண்ட பார்வதி தேவி, இதற்கான காரணத்தை சிவபெருமானிடம் கேட்டார்.

சிவபெருமான் விளக்கம் அளிக்கத் தொடங்கினார். ‘தேவி! பிருங்கி முனிவர் பாக்கியத்தை விரும்புகிறவன் அல்ல. அவன் மோட்சத்தை அடைய நினைப் பவன். மவுனநிலை வகித்த பெரும் தவமுடையவன்; காரணப் பொருள் ஒன்றே; மற்றொன்று இல்லை எனக் கருதுபவன். ஆகையால் தான் என்னை மட்டும் வழிபட்டுச் சென்றான்’ என்று கூறினார்.

இதைக் கேட்ட பார்வதி தேவி, பிருங்கி முனிவரிடம், ‘பிருங்கியே! நான் தான் ஈசனும் சக்தியாக இருப்பவள். உலகில் சக்தியும் சிவனும் இணைந்து இருப்பதுதான் நியதி. சக்தி இல்லையேல் சிவன் கூட இல்லை. உம் உடம்பில் ஓடும் ரத்தமும் ஒட்டியிருக்கும் சதையும் கூட சக்தியான எனது அம்சங்களே! தெரியுமா உமக்கு?’ எனக் கோபமாகச் சொன்னாள்.

அதற்கு முனிவரோ, ‘தாயே! நீங்கள் கூறும் சக்தி ஏதும் எனக்கு வேண்டாம் என்று கூறிவிட்டு தன் உடம்பில் இருந்த ரத்தத்தையும் சதையையும் உதறி எறிந்தார். சக்தியை இழந்த அவரால் நிற்கக்கூட முடியவில்லை. தடுமாறிய அவருக்கு சிவபெருமான் ஓர் ஊன்றுக்கோலை கொடுத்தார். அதன் உதவியோடு தனது இருப்பிடம் சென்றடைந்தார் முனிவர். இந்த சம்பவம் பார்வதியின் மனதை வெகுவாகப் பாதித்தது.

பார்வதிதேவி கயிலாயத்தை விட்டு பூலோகத்தை அடைந்து கவுதம முனிவரின் ஆசிரமத்தில் தங்கினாள். அன்னையின் வருகையால், பன்னிரண்டு வருடம் மழையின்றி வாடிப்போய் இருந்த, அந்த ஆசிரமம் இருந்த இடம் நந்தவனமானது. எங்கும் பூக்களின் நறுமணம் வீசியது.

அப்போது தர்ப்பை முதலியவற்றிற்காக வெளியே சென்றிருந்த கவுதம முனிவர், உமாதேவியார் எழுந்தருளியிருப்பதைத் தெரிந்து கொள்ளாதவராய்ப் பூங்காவைக் கண்டு அதிசயித்து, அதனைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்தார். வரும்போது ஒரு வில்வ மரத்தடியிலே எழுந்தருளியிருக்கும் உமா தேவியாரைக் கண்டார்.

‘தாயே! கயிலாசத்தை நீங்கிப் பூலோகத்திலே அடியேனுக்குக் காட்சியளித்தருளிய தன்மைக்கு, யான் என்ன தவம் செய்தேனோ? என் முன்னோர் புரிந்த பெருந்தவமோ? அல்லது இந்த ஆசிரமந்தான் செய்த புண்ணியமோ?’ என்று கூறி வணங்கியவர், அன்னை பார்வதி தேவி வந்ததன் நோக்கத்தைக் கேட்டு அறிந்து கொண்டார்.

பார்வதி தேவி கவுதமரை நோக்கி, ‘தபோதனரே! சிவபெருமானுக்கு இடது பாகத்தில் இணையும் பொருட்டு, நான் ஒரு விரதம் அனுஷ்டிக்க வேண்டும். மிகவும் மகத்துவம் நிறைந்த விரதம் ஒன்றையும், அதனை அனுஷ்டிக்கும் முறைையயும் உரைத்தல் வேண்டும்’ எனக் கேட்டாள்.

முனிவர், ‘தாயே! பூவுலகில் அனுஷ்டிக்கப்படும் சிறந்த விரதம் ஒன்றுண்டு. கேதாரீஸ்வரர் விரதம் என்றும், கேதார விரதம் என்றும் அதற்குப்பெயர்’ எனக் கூறி, அதனை அனுஷ்டிக்கும் முறையையும் கூறினார்.

‘இந்த கேதாரீஸ்வரர் விரதம் புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி திதியில் இருந்து ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்த்தசித் திதி வரையில் அனுஷ்டிக்கப்படுவது. அல்லது புரட்டாசி தேய்பிறை பிரதமை முதல் ஐப்பசி தேய்பிறை சதுர்த்தசி வரை உள்ள நாட்களில் இவ்விரதம் அனுஷ்டிக்கப்படும். அதுவும் இல்லாமல் ஐப்பசி தேய்பிறை சதுர்த்தசியாகிய ஒரு நாளாயினும் கேதாரநாதரைக் குறித்து அனுஷ்டிக்கப்படுவதாகும்.

விரதம் ஆரம்பித்த நாட்கள் முதல், ஒவ்வொரு பொழுதும் சூரிய அஸ்த மனத்தின் பின் உணவருந்தி இரவில் தர்ப்பையில் உறங்க வேண்டும். இறுதி நாளாகிய சதுர்த்தசி அன்று கும்பம் வைத்து, அர்ச்சனை செய்து, முறுக்கு, அதிரசம், வெண்தாமரை, வெற்றிலை, பாக்கு, சந்தனம் உருண்டை, மாஇலை, அரளி மொட்டு, வாழைப்பழம் போன்றவற்றை 21 என்ற எண்ணிக்கையில் படைத்து பூஜித்து கேதாரநாதரை வணங்கி உபவாசமிருத்தல் வேண்டும். மறுநாள் உதயத்தில் உபவாசம் முடிக்க வேண்டும்’ என்று விரத முறையை கவுதமர் கூறினார்.

அதன்படியே பார்வதி தேவி விரதம் இருந்து வந்தாள். முடிவில் சிவபெருமான் தோன்றி, அன்னைக்கு தன்னுடைய உடலில் சரிபாதியைத் தந்து அர்த்தநாரீஸ்வரராக கயிலாயம் எழுந்தருளினார்.

கேதாரீஸ்வரரைக் குறித்து உமாதேவியாராகிய கவுரி அனுஷ்டித்த விரதமே ‘கேதார கவுரி விரதம்’ என்று அழைக்கப்படுகிறது.

கேதார கவுரி விரதமிருக்கும் பெண்களும் மேற்கூறிய முறையில் விரதம் இருக்க வேண்டும். இதில் சதுர்த்தசி நாளில் கும்பம் வைத்து அதை அம்மனாக நினைத்து வழிபட வேண்டும். ஆதியில் பரசிவத்திலிருந்து மெல்லிய மின்னல் ஒளி போல் வெண்மையாகத் தோன்றி, அண்ட சராசரங்களையும் உயிர்களையும் படைத்து, அவற்றுக்கெல்லாம் அருள, மலைகளின் மேல் வந்து தங்கினாள் தேவி. வெண்மையான நிறத்துடன் இருந்தாலும் மலைகளில் தங்கியதாலும் ‘கவுரி’ என அழைக்கப்பட்டாள். அருணகிரிநாதர் கவுரிதேவியை, ‘உலகு தரு கவுரி’ எனப் போற்றுகிறார். கவுரிதேவியை வழிபடுவது, அனைத்து தேவ-தேவியரையும் வழிபடுவதற்குச் சமம். கவுரி வழிபாடு இல்லறத்தைச் செழிக்கச் செய்யும் சிறந்த வழிபாடு என்கின்றன ஞானநூல்கள். ஞானிகள் 108 வகை கவுரி தேவி வடிவங்களைத் தேர்ந்தெடுத்து வழிபட வகை செய்துள்ளனர். அதிலும் மிக முக்கியமானது 16 வகையான கவுரி வழிபாடு. இந்த வழிபாட்டால் சகல ஐஸ்வரியங்களும் பெருகும்.

ஞான கவுரி

ஒரு முறை சக்திதேவி, ‘உலக உயிர்கள் செயல்படுவது எனது சக்தியால்தான், ஆகையால் எனது சக்தியே உயர்ந்தது’ என்று வாதிட்டாள். சிவனாரோ, ஒருகணம் உலக உயிர்களின் அறிவை நீக்கினார். இதனால் பெரும் குழப்பம் நேர்ந்தது. அதைக் கண்ட தேவி திகைத்தாள். உயிர்களுக்கு சக்தி மட்டுமே போதாது என்று உணர்ந்தவள், சிவபெருமானை பணிந்தாள். சிவம், உலக உயிர்களுக்கு மீண்டும் ஞானம் அளித்தது. கவுரி தேவி தன் தவறுக்கு வன்னி மரத்தடியில் அமர்ந்து தவம் செய்தாள். ஈசன் அன்னைக்கு ஆசி வழங்கி அவளை, அறிவின் அரசியாக்கினார். இதனால் அம்பிகை ‘ஞான கவுரி’ என போற்றப்பட்டாள்.

பிரம்மன் அவளை ஞானஸ்வர கவுரியாக, கார்த்திகை மாத வளர்பிறை பஞ்சமியில் வன்னி மரத்தின் அடியில் இருத்தி வழிப்பட்டான். அந்நாள் ‘ஞான பஞ்சமி’, ‘கவுரி பஞ்சமி’ என்று அழைக்கப்படுகிறது. இவளுடன் ஞான விநாயகர் வீற்றிருப்பார். இந்த தேவி, மக்களுக்கு உயர்ந்த ஞானத்தையும் கல்வியையும் அருள்கின்றாள்.

அமிர்த கவுரி

உயிர்களுக்குக் குறையாத ஆயுளைத் தருவது அமிர்தம். மிருத்யுஞ்ஜயரான சிவபெருமானின் தேவி என்பதால், அன்னைக்கு ‘அமிர்த கவுரி’ என்று பெயர். இவளுக்குரிய நாள் ஆடி மாத பவுர்ணமி, ஜல ராசியான கடக மாதத்தில் இவளை வழிபடுவதால் ஆயுள் விருத்தியாகும்; வம்சம் செழிக்கும். இவளுடன் அமிர்த விநாயகர் வீற்றிருப்பார். திருகடவூர் அபிராமி, அமிர்த கவுரியானவள். அங்குள்ள கள்ளவாரணப் பிள்ளையார், அமுத விநாயகர் ஆவார்.

சுமித்ரா கவுரி

உயிர்களுக்கு இறைவன் தலைசிறந்த நண்பனாக இருக்கிறார். சுந்தரரின் தோழனாக ஈசன் அருள் பாலித்த கதைகள், நமக்கு தெரியும். அவரைப் போன்றே உயிர்களின் உற்ற தோழியாகத் திகழும் அம்பிகையை, ‘அன்பாயி சினேகவல்லி’ என போற்றுகின்றன புராணங்கள். திருஆடானையில் அருளும் அம்பிகைக்கு ‘சினேகவல்லி’ என்று பெயர். இவளையே வடமொழியில் ‘சுமித்ரா கவுரி’ என்று அழைக்கிறார்கள். இவளை வழிபட, நல்ல சுற்றமும் நட்பும் வாய்க்கும்.

சம்பத் கவுரி

வாழ்வுக்கு அவசியமான உணவு, உடை, உறைவிடத்தை ‘சம்பத்துகள்’ என்பர். அந்தக் காலத்தில் பசுக்களும் (கால்நடைகள்) உயர்ந்த செல்வமாகப் போற்றப்பட்டன. அத்தகைய உயர்ந்த சம்பத்துகள் பெருக அருள்பவள் ‘சம்பத் கவுரி’. சம்பத்துகளை உணர்த்தும் வகையில் பசுவுடன் காட்சி அளிப்பாள் இந்த தேவி. கவுரிதேவியே பசுவாக உருவெடுத்து வந்து, சிவபூஜை செய்த தலங்களும் உண்டு. இதனால் அவளுக்கு கோமதி, ஆவுடைநாயகி ஆகிய திருப்பெயர்கள் வழங்கப்படுகின்றன. திருச்சிக்கு அருகிலுள்ள துறையூரில் இறைவன், சம்பத் கவுரி சமேத நந்தீசுவராகக் கோவில் கொண்டுள்ளார். காசி அன்னபூரணியையும் ‘மகாமங்கள கவுரி’, ‘சம்பத் கவுரி’ என்பார்கள். இவளுடன் ஐஸ்வர்ய மகாகணபதி வீற்றிருக்கிறார். பங்குனி-வளர்பிறை திருதியையில் விரதம் இருந்து சம்பத் கவுரியை வழிபட வீட்டில் தானியம், குழந்தை குட்டிகளுடன் கூடிய வம்சம், செல்வம் எல்லாம் விருத்தியாகின்றன.

யோக கவுரி

யோக வித்தையின் தலைவியாக மகா கவுரி திகழ் கிறாள். இவளையே ‘யோக கவுரி’ என்கிறோம். மகா சித்தனாக விளங்கும் சிவபெருமானுடன், அந்த அம்பிகை யோகேஸ்வரியாக வீற்றிருக்கிறாள். காசியில் அவர்கள் இருவரும் வீற்றிருக்கும் பீடம் ‘சித்த யோகேஸ்வரி பீடம்’ என்று அழைக்கப்படுகிறது. சித்தர்கள் யோகங்களை அருளும் அம்பிகையை ‘யோகாம்பிகை’, ‘யோக கவுரி’ என்று சொல்கிறார்கள். யோக கவுரியுடன் வீற்றிருக்கும் விநாயகரை ‘யோக விநாயகர்’ என்பர். திருவாரூரில் தியாகராஜர் மண்டபத்தில் வீற்றிருக்கும் (மூலாதார) விநாயகரை, யோக கணபதி என்று அழைப்பர். திருவாரூரிலுள்ள கமலாம்பிகை ‘யோக கவுரி’ ஆவாள்.

சாம்ராஜ்ய மகா கவுரி

அன்பும் வீரமும் ஒருங்கே விளங்கும் தலைமைப் பண்பை தரும் தேவி இவள். இந்த அம்பிகையை ராஜராஜேஸ்வரியாகவும் வணங்குவார்கள். இந்த தேவியுடன் ராஜ கணபதி அருள்புரிவார். இவளை மனதார வழிபட, ராஜ யோகம் கிடைக்கும்.

வஜ்ர ச்ருங்கல கவுரி

உறுதியான உடலை ‘வஜ்ர தேகம்’ என்பர். அத்தகைய உடலை உயிர் களுக்குத் தரும் கவுரிதேவி ‘வஜ்ர ச்ருங்கல’ எனப் போற்றப்படுகிறாள். கருட வாகனத்தில் பவனி வரும் இவள், அமுத கலசம், சக்கரம், கத்தி ஆகியவற்றுடன் நீண்ட சங்கிலியை ஏந்திக் காட்சியளிக்கிறாள். ‘ச்ருங்கலம்’ என்பதற்கு, ‘சங்கிலி’ என்பது பொருள். வைரமயமான சங்கிலியைத் தாங்கி இருப்பதால், ‘வஜ்ர ச்ருங்கல கவுரி’ எனப்படுகிறாள். உயிர் களுக்கு வஜ்ர தேகத்தை அளித்து, நோய் நொடிகள் அணுகாமல் காத்து அருள்புரிவதுடன் இறுதியில் மோட்சத்தையும் தருகிறாள். இவளுடன் இருப்பது சித்தி விநாயகர்.

விஸ்வபுஜா மகாகவுரி

தீவினைப் பயன்களை விலக்கி, நல்வினைப் பயனை மிகுதியாக்கி, உயிர்களுக்கு இன்பங்களை அளிக்கும் தேவி இவள். காசிக்கண்டம் இவளுடைய பெருமைகளை விவரிக்கிறது. தூய எண்ணங்களை மனதில் வளரச் செய்து, ஆசைகளைப் பூர்த்தி செய்பவளும் இவளே! எனவே, ‘மனதார பூர்த்தி கவுரி’ என்றும் அழைக்கப்படுகிறாள். சித்திரை மாத வளர்பிறை திருதியையில் இவளை வழிபடுவது விசேஷம். இவளுடன் ஆசா விநாயகர் வீற்றிருக்கிறார்.

அசோக கவுரி

துன்பமற்ற இடமே ‘அசோகசாலம்’ எனும் தேவியின் பட்டணமாகும். இங்கு தேவி, ‘அசோக கவுரி’ என்னும் பெயரில் வீற்றிருக்கிறாள். சித்திரை வளர்பிறை அஷ்டமியில் (அசோகஷ்டமி) அசோக கவுரியை வழிபட, பேரின்ப வாழ்வை அடையலாம். இந்த கவுரியுடன் சங்கடஹர விநாயகர் வீற்றிருக்கிறார்.

த்ரைலோக்ய மோஹன கவுரி

ஆசைக் கடலில் சிக்கி அவதிப்படாமல் இருக்க வழி செய்வதால், இந்த கவுரிக்கு ‘த்ரைலோக்ய மோஹன கவுரி’ என்று பெயர். மனதுக்கு உற்சாகத்தையும் உடலுக்குத் தெய்வீக சக்திகளையும் அளிக்கிறாள் இவள். இவளுடன் த்ரைலோக்ய மோஹன கணபதி வீற்றிருக் கிறார். காசியில் நளகூபரேஸ்வரருக்கு மேற்குப் பக்கத்தில், குப்ஜாம்பரேஸ்வரர் என்னும் சிவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் இந்த கவுரி தேவியை வழிபடலாம்.

சுவர்ண கவுரி

ஒரு பிரளய முடிவில் அலைகடலின் நடுவில் சொர்ண லிங்கம் தோன்றியது. தேவர்கள் யாவரும் அந்த லிங்கத்தைப் பூஜித்தனர். அப்போது, அதிலிருந்து பொன்மயமாக ஈசனும், பொற்கொடியாக பராசக்தியும் தோன்றினர். அந்த தேவியை, ‘சுவர்ணவல்லி’ என்று தேவர்கள் போற்றினர். சொர்ண கவுரியை வழிபடுவதால் தோஷங்கள், வறுமை ஆகியன நீங்கும். குலதெய்வங்களின் திருவருள் கிடைக்கும். சுவர்ணகவுரி விரதத்தை, ஆவணி வளர்பிறை திருதியை நாளில் கடைப்பிடிக்க வேண்டும் என்கின்றன. புராணங்கள். கடலரசியான அவளை மாசி மாதத்தில் வழிபடுவதால் பூரண பலனை அடையலாம் என்று சொல்பவர்களும் உண்டு.

வரதான கவுரி

கொடை வள்ளல்கள் கரத்தில் ‘வரதான கவுரி’ குடி யிருப்பாள். அன்பர்கள் விரும்பும் வரங்களைத் தானமாக அளிப்பதால் இவள் ‘வரதான கவுரி’ என்று போற்றப்படுகிறாள். திருவையாறில் விளங்கும் அம்பிகை, அறம் வளர்த்த நாயகி; வடமொழியில் தர்மசம்வர்த்தினி. அவளுடைய கணவன் அறம்வளர்த்தீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். காஞ்சியிலும் அறம்வளர்த்தீஸ்வரர் ஆலயத்தைத் தரிசிக்கலாம். புரட்டாசி வளர்பிறை திருதியை நாளில், வரதான கவுரியை வழிபடுவது சிறப்பு.

சத்யவீர கவுரி

நல்ல மனம் படைத்தவர்களே கொடுத்த வாக்கை நிறைவேற்றுவர். அத்தகைய மனப்பாங்கை அருள்பவள் ‘சத்யவீர கவுரி’. இந்த தேவியுடன் வீர கணபதி அருள்பாலிப்பார். இந்த கவுரிக்குரிய நாள், ஆடி மாத வளர்பிறை திரயோதசி ஆகும். இந்த வழிபாட்டை ஜெயபார்வதி விரதம், ஜெய கவுரி விரதம் என்று அழைக்கின்றனர்.

கீர்த்தி கவுரி (எ) விஜய கவுரி

நற்பயனால் ஒருவன் பெரிய புகழை அடைந்திருந்த போதிலும், அதன் பயனை முழுமையாக அனுபவிக்கச் செய்யும் தேவியாக ‘விஜய கவுரி’ விளங்குகிறாள். அவளுடைய அருள் இருக்கும் வரையில், ஒருவரது நற்குணங்களும் செயல்களும் மேன்மைபெறும். கெட்ட நண்பர்களும், பகைவர்களும் விலகுவர்.

கஜ கவுரி

பிள்ளையாரை மடியில் அமர்த்தியபடி அருள்புரியும் தேவி இவள். ஆடி மாத பவுர்ணமி திதியில் இந்த தேவியை வழிபட, சந்தான பாக்கியம் கிடைக்கும்; வம்சம் விருத்தியாகும். காசி அன்னபூரணி ஆலயத்தில் சங்கர கவுரி, கணபதியோடு இருக்கும் பெரிய திருவுருவம் உள்ளது. இலங்கையில், பல இடங்களில் தேர்ச் சிற்பங்களாகவும், தூண் சிற்பங்களாகவும் கஜ கவுரி காட்சி யளிக்கிறாள்.

சுயம் கவுரி

சிவபெருமானை தன் மணமகனாக மனதில் எண்ணியவாறு, நடந்து செல்லும் கோலத்தில் அருள்பவள், ‘சுயம் கவுரி’. திருமணத் தடையால் வருந்தும் பெண்கள், சுயம்வர கவுரியை வழிபட்டால் நல்ல கணவர் அமைவார். ருக்மணி, சீதை, சாவித்ரி முதலானோரின் வரலாறுகள், கவுரி பூஜையின் சிறப்பை வெளிப்படுத்துகின்றன. நல்ல இல்லறத்தை நல்கும் இந்த அம்பிகையை ‘சாவித்ரி கவுரி’ என்றும் அழைக்கின்றனர். இந்த தேவியுடன் கல்யாண கணபதி வீற்றிருக்கிறார்.

Next Story