அருணாசலேஸ்வரர் கோவிலில் வெகு சிறப்பாக நடைபெற்ற பந்தக்கால் நடும் முகூர்த்தம் நிகழ்ச்சி


அருணாசலேஸ்வரர் கோவிலில்  வெகு சிறப்பாக நடைபெற்ற பந்தக்கால் நடும் முகூர்த்தம் நிகழ்ச்சி
x

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் பந்தக்கால் நடும் முகூர்த்தம் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெறும்.

இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற நவம்பர் மாதம் 24-ந் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவிற்கான கொடியேற்ற நிகழ்ச்சி நவம்பர் மாதம் 27-ந் தேதி நடக்கிறது. டிசம்பர் 6-ம் தேதி அன்று மாலை 6 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும்.

திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் மகா தீபத்தின்று தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சணக்கான பக்தர்கள் வந்து மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். இவ்விழாவிற்கான பூர்வாங்க பணிகள் தொடங்குவதற்கான பந்தக்கால் நடும் முகூர்த்தம் நிகழ்ச்சி நேற்று அருணாசலேவரர் கோவிலின் ராஜகோபுரம் முன்பு நடைபெற்றது.

முன்னதாக கோவிலில் 3-ம் பிரகாரத்தில் உள்ள சம்பந்த விநாயகருக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து அங்கிருந்து பந்தக்கால் கோவிலின் ராஜகோபுரம் முன்பு கொண்டு வரப்பட்டது.

தொடர்ந்து சிவாச்சாரியார்கள் தேரடி வீதியில் உள்ள முனீஸ்வரன் கோவில் மற்றும் பஞ்ச மூர்த்திகள் தேர்களுக்கு சிறப்பு பூஜை செய்தனர். பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் சொல்ல மங்கள வாத்தியம் முழங்க பந்தக்கால் நடும் முகூர்த்தம் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.


Next Story