நற்செய்தியின் நோக்கம்...


நற்செய்தியின் நோக்கம்...
x

இயேசு கிறிஸ்துவும் சமாரியப் பெண்ணும் நடத்திய உரையாடல் யோவான் நற்செய்தி நூல் நான்காம் அதிகாரத்தில் உள்ளது. அதில் யூதர்களின் வரலாறு பற்றியும், ஜீவ தண்ணீர் பற்றியும், கடவுள் பற்றியும், உண்மையான வழிபாடு பற்றியும் மற்றும் மேசியா பற்றியும் இடம் பெற்றிருந்தது.

சாதாரணமாக இந்தப் பகுதியை மையப்படுத்தி அருளுரையாற்றுகின்றவர்கள் சமாரியப் பெண் நடத்தை குறித்து, இயேசு கிறிஸ்து அவருடைய தீர்க்கதரிசனப் பார்வையில் கண்டுபிடித்து அதை அந்தப் பெண்ணிடம் கூறி அவரை வியப்பில் ஆழ்த்தியதாகக் கூறுவர்.

ஆனால் யோவான் நற்செய்தி நூலாசிரியரின் நோக்கம் அதுவல்ல என்பதை இப்பகுதியை ஆழ்ந்து கற்கும் போது நமக்குத் தெரியவருகிறது.

சமாரியப் பெண்ணின் வழியாக யூதர்கள் கடைபிடித்து வந்த தூய்மை-தீட்டுக் கொள்கை மீதான சமாரியரின் விமர்சனம், சமாரியர்களிடமிருந்த வரலாற்று அறிவு, மற்றும் யூதர்களை ஏற்கும் சமாரியரின் திறந்த மனப்பான்மை வெளிப்படுகிறது.

யோவான் நற்செய்தி நூல் நான்காம் அதிகாரத்தில் மொத்தம் 54 வசனங்கள் உள்ளன. அதில் 30 வசனங்கள் இயேசு சமாரியப் பெண்ணுடன் நடத்திய உரையாடல் மற்றும் சமாரியாவில் நடந்தது பற்றி கூறுகிறது.

இதில் உள்ள 30 வசனங்களில் மூன்று வசனங்கள் மட்டுமே அப்பெண்ணின் தனிப்பட்ட வாழ்வு பற்றி பேசுகிறது. அதிலும் நற்செய்தி நூலாசிரியரோ அல்லது இயேசுவோ அந்தப் பெண்ணை இழிவுபடுத்திப் பேசவில்லை என்பது கவனிக்கத்தக்கது ஆகும்.

இயேசுவுக்கும் சமாரியப் பெண்ணுக்கும் இடையே நடந்த உரையாடல் உயர்மட்டத் தன்மை கொண்டது. அதில் யூதர்களின் வரலாறு பற்றியும், ஜீவ தண்ணீர் பற்றியும், கடவுள் பற்றியும், உண்மையான வழிபாடு பற்றியும் மற்றும் மேசியா பற்றியும் இடம் பெற்றிருந்தது என்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

முதலில் இயேசுவுடன் இவ்வளவு முக்கிய உரையாடலை நடத்திய இப்பெண்ணின் பெயர் குறிப்பிடப்படவில்லை. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை. காரணம் யோவான் நற்செய்தி நூலில் இயேசு, கானா ஊரில் நடந்தத் திருமணத்தில் முதல் அடையாளத்தைச் செய்ததாகக் குறிப்பிட்டிருந்த போதும், அந்த மண வீட்டாரின் பெயரோ அல்லது மணமகனின் பெயரையோ குறிப்பிடவில்லை (2:1-12); இந்தப் பகுதியிலும் சமாரியப் பெண்ணின் பெயரைக் குறிப்பிடவில்லை (4:1-43); பெதஸ்தா குளத்தருகே உடல்நலமற்றிருந்து குணமாக்கப்பட்டவர் பெயரும் குறிப்பிடப்படவில்லை (5:1-18); விபச்சாரத்தில் பிடிபட்டு விடுவிக்கப்பட்டப் பெண்ணின் பெயரும் குறிப்பிடப்படவில்லை (8: 1-11); பிறவியிலேயே பார்வையற்றிருந்து பார்வையடைந்தவரின் பெயரும் குறிப்பிடப்படவில்லை (9: 1-34). இதை யோவான் நற்செய்தி நூலின் நடை என்று கூட புரிந்து கொள்ளலாம்.

இதில் கவனிக்கத்தக்கது என்னவெனில் மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு நிகழ்வும் ஆழ்ந்த சிந்தனையையும், உரையாடலையும், கடுமையான விவாதங்களையும் ஏற்படுத்தி இருக்கின்றன. இவ்வாறு சிந்தனையை தூண்டி விவாதத்தைத் தொடங்கிவைப்பது கூட யோவான் நற்செய்தி நூலின் நோக்கமாக இருக்கலாம்.

பெரும்பாலான கிறிஸ்தவர்களின் நம்பிக்கைகள் பழமை சார்ந்தும், மரபு சார்ந்தும் கேள்வி எழுப்பப்படாமலும் விவாதத்திற்கு உட்படுத்தப்படாமலும் தொடர்கின்றன என்பதே உண்மை.

சுமார் 2000 ஆண்டுக்கு முன் வாழ்ந்த சமாரியப்பெண் வரலாற்று அறிவும், சமய அறிவும், சமுக அறிவும் உடையவராய் இயேசுவிடம் கேள்விகள் எழுப்பி உரையாடியது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. சமாரியப்பெண் இயேசுவுடன் நடத்திய உரையாடலின் தலைப்புகளை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்.

1) யூதர் சமாரியரை எவ்வாறு சமமற்றும், இழிவாகவும் நடத்தினர் (4:7-9)

2) இயேசு வாழ்வு தரும் தண்ணீர் (4:10)

3) யூதர்களின் வரலாற்றில் யாக்கோபு (4:12-12)

4) நித்தியஜீவன் (4:14)

5) கடவுளை எங்கும் தொழலாம் (4:19-20)

6) கடவுள் உருவமற்றவர் (4: 24)

7) ஆவியோடும் உண்மையோடும் வழிபடுதல்(4:24)

8) மேசியா பற்றிய கருத்து.(4:25-26,29)

9) இயேசு உலகனைத்துக்கும் மீட்பர் (4:42)

இவ்வாறு இயேசுவுடன் உரையாடிய பெண்களில் சமாரியப்பெண்ணும் முக்கிய இடம் வகிக்கிறார்.


Next Story