அதியமான்கோட்டை தட்சிணகாசி காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு


தினத்தந்தி 17 Oct 2022 7:00 PM GMT (Updated: 17 Oct 2022 7:01 PM GMT)

அதியமான்கோட்டை தட்சிணகாசி காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நேற்று நடந்தது. 108 கிலோ மிளகு, 1,008 கிலோ மிளகாயுடன் சத்ரு சம்ஹார சிறப்பு யாகம் நடைபெற்றது.

தர்மபுரி

நல்லம்பள்ளி:

தேய்பிறை அஷ்டமி

தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற தட்சிணகாசி காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை முதல் சாமிக்கு 108 வகை நறுமணப்பொருட்கள் மற்றும் பல்வேறு வகையான பழங்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.

இதைத்தொடர்ந்து சாமிக்கு 1,008 ஆகம பூஜைகளும், வேத பாராயணம் மற்றும் சிறப்பு அர்ச்சனையும் நடந்தது. பின்னர் சாமிக்கு உபகார பூஜைகளுடன் ராஜ அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

இந்த சிறப்பு வழிபாட்டில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள், கர்நாடக மாநில பக்தர்கள் என திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் சாம்பல் பூசணியில் விளக்கேற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சிறப்பு யாகம்

இதைத்தொடர்ந்து இரவு கோவில் வளாகத்தில் சத்ரு சம்ஹார யாகம் நடைபெற்றது. 108 கிலோ மிளகு, 1,008 கிலோ மிளகாய் கொண்டு நடைபெற்ற இந்த சிறப்பு யாகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கோவில் வளாகத்திலேயே சாமி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் உதயகுமார், கோவில் செயல் அலுவலர் ஜீவானந்தம், கோவில் அர்ச்சகர் கிருபாகரன் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


Next Story