மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திய ஒலிம்பிக் தங்கப்பதக்கம் !


மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திய ஒலிம்பிக் தங்கப்பதக்கம் !
x
தினத்தந்தி 8 Aug 2021 7:02 PM GMT (Updated: 8 Aug 2021 7:02 PM GMT)

கோலாகலம்.. இங்கு கொண்டாட்டம்.. என்று, உலகமே ரசித்து பார்த்த 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து முடிந்திருக்கிறது.

கோலாகலம்.. இங்கு கொண்டாட்டம்.. என்று, உலகமே ரசித்து பார்த்த 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து முடிந்திருக்கிறது. இதில், 205 நாடுகளைச் சேர்ந்த 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். ஜூலை 23-ந்தேதி முதல் நேற்று வரை நடந்த 33 வகையான போட்டிகளில், இந்தியாவிலிருந்து 18 வகையான போட்டிகளில் பங்கேற்க 124 பேர் கொண்ட அணி சென்றது. அதில், தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் 11 பேர்.

இந்த விளையாட்டு போட்டி முடிவுகளில் இந்தியா மகிழ்ச்சி கடலில் பூரித்து நிற்கிறது. இதுவரை இந்தியா ஒலிம்பிக் போட்டிகளில் தனிப்பட்ட வீரராக அபினவ் பிந்த்ரா துப்பாக்கி சுடும் போட்டியில் 2008-ல்தான் தங்கப்பதக்கம் பெற்றிருந்தார். நேற்று முன்தினம் நடந்த ஈட்டி எறிதல் போட்டியில் அரியானா மாநிலத்தை சேர்ந்த நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்று பெரும் சாதனை புரிந்துள்ளார். ஒலிம்பிக் வரலாற்றில், 1900-ம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஓட்டப்பந்தய வீரரான ஆங்கிலோ இந்தியர் நார்மன் பிரிட்சார்ட்2 வெள்ளிப்பதக்கங்கள் பெற்றார். அதன்பிறகு121 ஆண்டுகள் கழித்து தடகள போட்டியில் பெற்ற முதல் பதக்கம், அதுவும் முதல் தங்கப்பதக்கம் இதுதான். தங்கமகனை இந்தியா வாழ்த்துகிறது. இந்தியாவுக்கு 41 ஆண்டுகளுக்கு பிறகு ஆண்கள் ஆக்கி விளையாட்டில் ஒரு வெண்கலப்பதக்கம் கிடைத்ததும், மகளிர் ஆக்கி போட்டியில் பதக்கத்தை வெல்ல முடியாவிட்டாலும், இந்திய வீராங்கனைகளின் சிறப்பான ஆட்டத்தால் 4-வது இடத்தைப்பெற்று, மக்களின் மனதை வென்றிருப்பதும், ஆக்கி விளையாட்டுக்கு ஒரு புத்துயிர் கொடுத்துள்ளது. “ஆக்கி என்றாலே இந்தியாதான்..” என்று ஒரு காலத்தில் இருந்த நிலைமை, மீண்டெழும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது.

மகளிர் தனி நபர் ‘ஸ்டிரோக் பிளே’ கோல்ப் போட்டியில் பெங்களூருவை சேர்ந்த அதிதி அசோக், நூலிழையில் பதக்க வாய்ப்பை இழந்தார். பளு தூக்கும் போட்டியில் மணிப்பூரை சேர்ந்த மீராபாய் சானுவும், மல்யுத்த போட்டியில் அரியானாவை சேர்ந்த ரவிக்குமாரும் 2 வெள்ளிப்பதக்கங்களை பெற்றிருக்கிறார்கள். குத்துச்சண்டை போட்டியில் அசாமை சேர்ந்த லவ்லினாவும், பேட்மிண்டன் போட்டியில் தெலுங்கானாவை சேர்ந்த சிந்துவும், 8 பஞ்சாப் வீரர்களை உள்ளடக்கிய ஆண்கள் ஆக்கி அணியும், மல்யுத்த போட்டியில் பஜ்ரங் பூனியாவும் வெண்கலப்பதக்கங்களை வென்றெடுத்துள்ளனர். ஆக, 7 பதக்கங்களை இந்தியா பெற்றுள்ளது.

1896-ம் ஆண்டு முதல் நடந்துவரும் நவீன ஒலிம்பிக் போட்டிகளில், இந்தியா இதுவரை 10 தங்கம்,9 வெள்ளி, 16 வெண்கலம் என மொத்தம் 35 பதக்கங்களைத்தான் பெற்றிருக்கிறது. நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டியில், தமிழ்நாட்டுக்கு ஒரு பதக்கம்கூட கிடைக்கவில்லை என்பது பெரிய வருத்தமாக இருக்கிறது. அடுத்த 3 ஆண்டுகளில் 33-வது ஒலிம்பிக்போட்டி, பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடக்கிறது. இப்போது நமது வீரர்கள் பதக்கம் பெறாவிட்டாலும், சிறப்பான பயிற்சிகளை அளித்தால், அடுத்த ஒலிம்பிக்கில் நிறைய பதக்கங்களை வெல்வது உறுதி.

இப்போதே, ஏன் இன்று முதலே தகுதியான வீரர்களை தேர்ந்தெடுத்து, மத்திய-மாநில அரசுகள், அவர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கி, “உங்களுக்கு வேறு வேலையே இல்லை. அடுத்த 3 ஆண்டுகளுக்கு பயிற்சி ஒன்றுதான் வேலை” என்ற அளவில், உலகில் சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி அளிக்கவேண்டும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இதில் சிறப்பு கவனம் செலுத்தி, இந்த ஒலிம்பிக்கில் தமிழ்நாட்டிலிருந்து யாரும் பதக்கம் பெறவில்லையே? என்ற நிலையை மாற்றி, தமிழக வீரர்கள் பலர் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்களை பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தனர் என்ற புகழை ஈட்டுவதற்கு உரிய முயற்சிகளை எடுக்கவேண்டும். 13-ந்தேதி தாக்கல் செய்யப்படும் தமிழக பட்ஜெட்டில் இதற்காக கூடுதல் நிதி ஒதுக்கவேண்டும்.

Next Story