4 நாள் டெஸ்ட்: ஜிம்பாப்வேயை சுருட்டியது தென்ஆப்பிரிக்கா


4 நாள் டெஸ்ட்: ஜிம்பாப்வேயை சுருட்டியது தென்ஆப்பிரிக்கா
x
தினத்தந்தி 27 Dec 2017 10:15 PM GMT (Updated: 27 Dec 2017 8:38 PM GMT)

ஜிம்பாப்வேக்கு எதிரான 4 நாள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 2-வது நாளிலேயே தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.

போர்ட் எலிசபெத்,

தென்ஆப்பிரிக்கா - ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 4 நாள் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 309 ரன்கள் சேர்த்து ‘டிக்ளேர்’ செய்தது. எய்டன் மார்க்ராம் 125 ரன்களும், பவுமா 44 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஜிம்பாப்வே ஆட்ட நேர இறுதியில் 4 விக்கெட்டுக்கு 30 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 2-வது நாளான நேற்று தொடர்ந்து பேட் செய்த ஜிம்பாப்வே அணி தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திண்டாடியது. வெறும் 30.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த ஜிம்பாப்வே 68 ரன்களில் சுருண்டு ‘பாலோ-ஆன்’ ஆனது. அந்த அணியின் 5-வது மோசமான ஸ்கோர் இதுவாகும். ரையான் பர்ல் (16 ரன்), கைல் ஜார்விஸ் (23 ரன்) தவிர வேறு யாரும் இரட்டை இலக்கை தொடவில்லை. தென்ஆப்பிரிக்க தரப்பில் மோர்னே மோர்கல் 5 விக்கெட்டுகளை அள்ளினார். இன்னிங்சில் அவர் 5 விக்கெட் எடுப்பது இது 7-வது முறையாகும். ரபடா, பெலக்வாயோ தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

நான்கு நாள் டெஸ்டில் 150 ரன்கள் வித்தியாசம் இருந்தாலே ‘பாலோ-ஆன்’ கொடுக்க முடியும் என்று ஐ.சி.சி. புதிய விதிமுறையை வகுத்து இருப்பதால், அதன் அடிப்படையில் ஜிம்பாப்வேக்கு ‘பாலோ-ஆன்’ வழங்கி தொடர்ந்து பேட் செய்யும்படி தென்ஆப்பிரிக்கா பணித்தது.

இதையடுத்து 241 ரன்கள் பின்தங்கிய நிலையில் தொடர்ந்து 2-வது இன்னிங்சை விளையாடிய ஜிம்பாப்வே அணி மறுபடியும் தத்தளித்தது. முன்னணி வீரர்களான சிபாபா 15 ரன்களிலும், ஹாமில்டன் மசகட்சா 13 ரன்னிலும், பிரன்டன் டெய்லர் 16 ரன்களிலும், கிரேக் எர்வின் 23 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். 2-வது இன்னிங்சில் ஜிம்பாப்வே 42.3 ஓவர்களில் 121 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இதன் மூலம் தென்ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 120 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தென்ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜ் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

புதிய முயற்சியாக கொண்டு வரப்பட்ட பகல்-இரவு 4 நாள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி 2-வது நாளிலேயே முடிவுக்கு வந்தது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது.

Next Story