தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை கைப்பற்றுமா இந்திய அணி?


தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை கைப்பற்றுமா இந்திய அணி?
x
தினத்தந்தி 20 Feb 2018 10:30 PM GMT (Updated: 20 Feb 2018 7:24 PM GMT)

இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி செஞ்சூரியனில் இன்று இரவு நடக்கிறது.

செஞ்சூரியன்,

இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி செஞ்சூரியனில் இன்று இரவு நடக்கிறது.

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை இழந்த பிறகு விசுவரூபம் எடுத்துள்ளது. ஒரு நாள் தொடரை 5-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்திய இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரிலும் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி செஞ்சூரியனில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.

ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த தொடக்க ஆட்டத்தில் 203 ரன்கள் குவித்து 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிக்கனியை பறித்த இந்திய அணி, தொடரை வெல்லும் தீவிர முனைப்புடன் ஆயத்தமாகி வருகிறது. முந்தைய ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார். இன்றைய ஆட்டத்திலும் அவரது பந்து வீச்சு மீது எதிர்பார்ப்பு நிலவுகிறது. ரன் எடுக்க தடுமாறும் விக்கெட் கீப்பர் டோனி, பழைய நிலைக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார்.

இந்திய கேப்டன் விராட் கோலி இன்னும் 18 ரன்கள் எடுத்தால், சர்வதேச 20 ஓவர் போட்டியில் 2 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெறுவார். மேலும் எஞ்சிய இரு ஆட்டங்களையும் சேர்த்து அவர் 130 ரன்கள் எடுத்தால், இந்த சுற்றுப்பயணத்தில் அவரது ரன் எண்ணிக்கை ஆயிரமாக உயரும். வெஸ்ட் இண்டீசின் விவியன் ரிச்சர்ட்சுக்கு பிறகு ஒரு வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் ஆயிரம் ரன்களை எட்டும் 2-வது வீரர் என்ற அபூர்வ சாதனையை படைக்க முடியும். ஆனால் அந்த சாதனையை அடைவது கொஞ்சம் கடினம் தான்.

இதே மைதானத்தில் நடந்த இரண்டு ஒரு நாள் போட்டிகளில் வெற்றி கண்ட இந்திய அணி, மறுபடியும் இங்கு முத்திரையை பதிக்குமா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

தொடரை வெல்லும் வாய்ப்பில் நீடிக்க வேண்டும் என்றால் இன்றைய ஆட்டத்தில் டுமினி தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். அதனால் இந்த முறை வியூகங்களை மாற்றி கடுமையாக போராடுவார்கள் என்று நம்பலாம்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ஷிகர் தவான், ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா, விராட் கோலி (கேப்டன்), மனிஷ் பாண்டே, டோனி, ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், பும்ரா, ஜெய்தேவ் உனட்கட், யுஸ்வேந்திர சாஹல்.

தென்ஆப்பிரிக்கா: ரீஜா ஹென்ரிக்ஸ், ஜான் ஸ்மட்ஸ், டுமினி (கேப்டன்), டேவிட் மில்லர், பெஹர்டைன், ஹென்ரிச் கிளாசென், கிறிஸ் மோரிஸ், ஜூனியர் டாலா, பேட்டர்சன், பெலக்வாயோ, ஷம்சி அல்லது பாங்கிசோ.

இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி டென்1, சோனி3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

அங்கு பிற்பகலில் மழை பெய்வதற்கு 80 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இதனால் இந்த ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்படலாம்.

Next Story