விஜய் ஹசாரே கோப்பை: மும்பை, புதுச்சேரி அணிகள் வெற்றி


விஜய் ஹசாரே கோப்பை: மும்பை, புதுச்சேரி அணிகள் வெற்றி
x
தினத்தந்தி 19 Sep 2018 9:45 PM GMT (Updated: 19 Sep 2018 7:10 PM GMT)

விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் மும்பை, புதுச்சேரி அணிகள் வெற்றிபெற்றன.

பெங்களூரு,

விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நேற்று தொடங்கியது. பெங்களூருவில் நடந்த ஒரு ஆட்டத்தில் (ஏ பிரிவு) பரோடா அணி நிர்ணயித்த 239 ரன்கள் இலக்கை மும்பை அணி 41.3 ஓவர்களில் அடைந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணியில் பிரித்வி ஷா (98 ரன், 12 பவுண்டரி, 5 சிக்சர்), ஆட்டம் இழக்காமல் கேப்டன் ரஹானே (79 ரன்), ஸ்ரேயாஸ் அய்யர் (56 ரன்) ஆகியோர் அரைசதம் அடித்தனர். இதே போல் இமாச்சலபிரதேசத்துக்கு எதிராக 290 ரன்கள் குவித்த பஞ்சாப் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணியில் சுப்மான் கில் 115 ரன்களும், யுவராஜ்சிங் 48 ரன்களும் எடுத்தனர்.

சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ஒரு ஆட்டத்தில் சர்வீசஸ் அணி (சி பிரிவு), திரிபுராவை 118 ரன்களில் சுருட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதே சமயம் அசாம்-குஜராத், அரியானா-ஜார்கண்ட் இடையிலான ஆட்டங்கள் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. வதோதராவில் நடந்த ஒரு ஆட்டத்தில் மணிப்பூரை 120 ரன்களில் அடக்கிய புதுச்சேரி அணி அந்த இலக்கை 25.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எளிதில் எட்டியது.

Next Story