2-வது டெஸ்ட்: இந்திய அணி முதல் இன்னிங்சில் 283 ரன்களில் ஆல் அவுட்


2-வது டெஸ்ட்: இந்திய அணி முதல் இன்னிங்சில் 283 ரன்களில் ஆல் அவுட்
x

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 283 ரன்களில் ஆல் அவுட் அவுட் ஆனது.

பெர்த்,

இந்தியா - ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில்  108.3 ஓவர்களில் 326 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. 

இதையடுத்து, முதல் இன்னிங்சை துவங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே சறுக்கலாக அமைந்தது. பின்னர் விராட் கோலி- ரகானா ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் நேற்றைய ஆட்ட நேர முடிவில்,  இந்திய அணி முதல் இன்னிங்சில் 69 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள்  சேர்த்து இருந்தது.  கேப்டன் விராட் கோலி 82 ரன்களுடனும் (181 பந்து, 9 பவுண்டரி), ரஹானே 51 ரன்களுடனும் (103 பந்து, 6  பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர். 

இந்த நிலையில், இன்று 3-வது நாள் ஆட்டம் துவங்கியதும் ரகானே மேற்கொண்டு ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதன்பிறகு, கேப்டன் விராட் கோலியுடன் ஹனுமா விஹாரி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நம்பிக்கையூட்டும் விதத்தில் விளையாண்டது. சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த கேப்டன் விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி அடிக்கும் 25-வது சதம் இதுவாகும். 

இதற்கு மத்தியில், 20 ரன்கள் சேர்த்து இருந்த ஹனுமா விஹாரி ஹேசல்வுட் பந்தில் ஆட்டமிழந்தார். நம்பிக்கை அளித்து வந்த விராட் கோலியும் 123 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதற்கு பிறகு வந்த ரிஷாப் பண்ட் ஓரளவு அதிரடி காட்டினார். 36 ரன்களில் ரிஷாப் பாண்ட் ஆட்டமிழந்தார். கடைசி கட்ட வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 

105.5 ஓவர்கள் தாக்குப்பிடித்த இந்திய அணி 283 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், ஆஸ்திரேலிய அணியை விட முதல் இன்னிங்சில் இந்திய அணி 43 ரன்கள் பின்னிலையில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய நாதன் லயன் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

43  ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சில் பேட் செய்து வருகிறது. 


Next Story