வார்த்தை மோதலில் ஈடுபட்ட விராட்கோலி, டிம் பெய்னுக்கு நடுவர் எச்சரிக்கை


வார்த்தை மோதலில் ஈடுபட்ட விராட்கோலி, டிம் பெய்னுக்கு நடுவர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 17 Dec 2018 11:51 PM GMT (Updated: 17 Dec 2018 11:51 PM GMT)

வார்த்தை மோதலில் ஈடுபட்ட விராட்கோலி, டிம் பெய்னை நடுவர் எச்சரித்தார்.

பெர்த்,

ஆஸ்திரேலிய அணியினர் எதிரணி வீரர்களை கிண்டல் செய்து சீண்டுவதை வாடிக்கையாக கொண்டவர்கள். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய பிறகு ஆஸ்திரேலிய அணியினர் போட்டியின் போது அமைதி காத்தனர். அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியினர் அடக்கமாக நடந்து கொண்டனர். பெர்த்தில் நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டியின் 3-வது நாள் கடைசியில் அவர்கள் தங்களது பழைய வேலையை காட்ட ஆரம்பித்து விட்டனர்.

3-வது நாளின் கடைசி கட்டத்தில் பும்ரா வீசிய ஒரு பந்து டிம் பெய்னின் பேட்டை உரசியது போல் விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் கையில் தஞ்சம் அடைந்தது. உடனே விராட்கோலி அவுட் கேட்டு அப்பீல் செய்தார். ஆனால் நடுவர் அவுட் வழங்கவில்லை. அப்போது விராட்கோலி, டிம் பெய்ன் இடையே வாக்குவாதம் அரங்கேறியது. அந்த மோதல் போக்கு இன்றும் தொடர்ந்தது. 71-வது ஓவரை பும்ரா வீசினார். அபோது டிம் பெய்ன் அருகே பீல்டர்கள் நிற்கும் வகையில் விராட்கோலி பீல்டிங்கில் மாற்றம் செய்தார். அப்போது டிம் பெய்ன், விராட்கோலியிடம் ஏதோ சொல்ல இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இருவரும் மார்போடு, மார்பு உரசும் வகையில் நெருங்கியபடி நின்று கொண்டு வார்த்தை போரில் ஈடுபட்டனர். ‘நான் எந்த வார்த்தையும் சொல்லவில்லை. பிறகு ஏன் நீ கொந்தளிக்கிறாய்’ என்று டிம் பெய்னை பார்த்து விராட்கோலி கூறினார். அதற்கு டிம் பெய்ன் பதிலளிக்கையில், ‘நான் நல்லா தான் இருக்கேன். நீ தான் நேற்று நிதானத்தை இழந்து விட்டாய். இன்று ஏன் என்னை சமாதானப்படுத்த முயற்சிக்கிறாய்’ என்றார். உடனே நடுவர் கிறிஸ் காப்னேய் தலையிட்டு ‘போதும், போதும் இருவரும் போங்கள் என்று கூறினார். அதன் பிறகும் இருவரும் வாக்குவாதம் செய்ததால் நடுவர் இருவரையும் எச்சரித்தார். இதனால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


Next Story