புதிய வரலாறு படைத்தார் விராட் கோலி ! ஐசிசியின் 3 கவுரவ விருதுகளை பெற்றார்


புதிய வரலாறு படைத்தார் விராட் கோலி ! ஐசிசியின் 3 கவுரவ விருதுகளை பெற்றார்
x
தினத்தந்தி 22 Jan 2019 6:59 AM GMT (Updated: 24 Jan 2019 6:07 AM GMT)

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று அறிவித்த சிறந்த ஒருநாள் அணி, டெஸ்ட் அணி ஆகியவற்றுக்கு கேப்டனாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நியமிக்கப்பட்டுள்ளார்.

துபாய்,

2018-ஆம் ஆண்டு ஒரு பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் அபாரமாக  செயல்பட்ட விராட் கோலியை, சிறப்பிக்கும் வகையில், ஐசிசியின் கனவு அணியின் கேப்டனாக அவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.  ஒரு ஆண்டில் மிகச்சிறப்பாக செயல்பட்ட வீரர்களை கவுரவிக்கும் வகையில் ஆண்டு தோறும் ஐசிசி கனவு அணி அறிவிக்கப்படுகிறது. இந்த அணியின் கேப்டனாக விராட் கோலி அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னாள் வீரர்கள், ஊடகத்துறையினர் உள்ளிட்டவர்கள் அடங்கிய ஐசிசி வோட்டிங் அகடமியால் கனவு அணி தேர்வு செய்யப்படுகிறது. 

ஐசிசி கனவு ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் : ரோகித் சர்மா (இந்தியா) பெர்ஸ்டோ (இங்கிலாந்து) விராட் கோலி (கேப்டன்), ஜோ ரூட் (இங்கிலாந்து), ரோஸ் டெய்லர் (நியூசிலாந்து), ஜோஸ் பட்லர் (இங்கிலாந்து), பென்ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து), முஸ்தபிக் (வங்காளதேசம்), ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்) குல்தீப் யாதவ் (இந்தியா) ஜஸ்பிரித் பும்ரா (இந்தியா).

ஐசிசியின் கனவு டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள்: லதம் (நியூசிலாந்து), கருண ரத்னே (இலங்கை), கோலி (இந்தியா), பாண்ட் (இந்தியா), வில்லியம்ஸ்ன் (நியூசிலாந்து), நிகோல்லஸ் (நியூசிலாந்து), ஹோல்டர் (வெஸ்ட் இண்டீஸ்) ரபாடா (தென் ஆப்பிரிக்கா) , லயன் (ஆஸ்திரேலியா) , பும்ரா (இந்தியா) , அபாஸ் (பாகிஸ்தான்).

சிறந்த வீரராக விராட் கோலி தேர்வு

* ஐசிசியின் சிறந்த ஒருநாள் மற்றும் டெஸ்ட் வீரராக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐசிசியின் சிறந்த வீரர் விருதையும் விராட் கோலியே தட்டிச்சென்றுள்ளார். சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராக விராட் கோலி இரண்டாவது ஆண்டாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒரே ஆண்டில் ஐசிசியின் மூன்று உயரிய விருதுகளை பெற்ற முதல் வீரர் விராட் கோலிதான் ஆவார். 

* 2018- ஆம் ஆண்டின் மிகச்சிறந்த நடுவராக தர்மசேனா தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
* சிறந்த இணை வீரராக கலம்மேக்லியோட் (ஸ்காட்லாந்து) தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
* வளர்ந்து வரும் இளம் வீரர் (2018) விருது -ரிஷப் பாண்ட் (இந்தியா) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அணியை பொருத்தவரை டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியும், ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி முதலிடத்திலும், இந்திய அணி 2-வது இடத்திலும் உள்ளது. கடந்த 2018 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை இந்திய அணி 6 போட்டிகளில் வெற்றியும், 7 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் வெற்றிகளை இந்திய அணி பெற்றது. ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 வெற்றிகளும், 4 தோல்விகளும், ஒரு போட்டி சமனிலும் முடிந்தன.

Next Story