இம்ரான்கான்-கோலி இடையே பல்வேறு ஒற்றுமைகள் உள்ளன: முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்துல் காதிர்


இம்ரான்கான்-கோலி இடையே பல்வேறு ஒற்றுமைகள் உள்ளன: முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்துல் காதிர்
x
தினத்தந்தி 6 Feb 2019 4:58 AM GMT (Updated: 6 Feb 2019 4:58 AM GMT)

இம்ரான்கான்-கோலி இடையே பல்வேறு ஒற்றுமைகள் உள்ளன என்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் தெரிவித்துள்ளார்.

கராச்சி,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், அந்நாட்டு பிரதமருமான இம்ரான்கான் மற்றும் இந்திய கேப்டன் விராட் கோலி இடையே பல்வேறு ஒற்றுமைகளை காண்பதாக அப்துல் காதிர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான அப்துல் காதிர் பாகிஸ்தானில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறுகையில், “விராட் கோலியை ஒரு கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் நான் பார்க்கும்போது, இம்ரான்கானை ஒத்து அவர் இருப்பதை என்னால் காண முடிகிறது. இம்ரன்கானைப் போலவே, எதையும் செய்யும் போது ஒரு உதாரணத்தை உருவாக்குவதோடு, தனது அணியும் இதையே செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.

அவர்கள் இருவரையும் (விராட் கோலி, இம்ரான்கான்) நான் ஒப்பிட மாட்டேன். ஆனால், விராட் கோலியை நான் பார்க்கையில், தலைமை வகிக்கும் பண்பு  அவருக்கு உள்ளது. பொறுப்பை தானே எடுத்துக்கொள்ளும் கோலி, சிறப்பாக விளையாடுவதோடு பிற வீரர்களும் சிறப்பாக விளையாட வேண்டும் எதிர்பார்க்கிறார்.

இம்ரான்கானை பற்றி நான் சொல்லவேண்டும் என்றால், அவர் கொண்டிருந்த ஆளுமை மற்றும் வீரர்களின் செயல்திறனை வெளிக்கொண்டு வரும் அவரது திறமையை விராட் கோலி இன்னும் பெற்றிருக்கவில்லை என்றே நான் கருதுகிறேன். ஆனால், இந்திய கேப்டனும் முன்னுதாரணமாக இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை” என்றார்.

பாகிஸ்தான் அணிக்காக 67 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 104 ஒருநாள் போட்டிகளில் அப்துல் காதிர் விளையாடியுள்ளார்.

Next Story