ராணுவ தொப்பி அணிந்து ஆடிய இந்திய அணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ஐ.சி.சி.க்கு, பாகிஸ்தான் மந்திரிகள் வலியுறுத்தல்


ராணுவ தொப்பி அணிந்து ஆடிய இந்திய அணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ஐ.சி.சி.க்கு, பாகிஸ்தான் மந்திரிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 9 March 2019 11:00 PM GMT (Updated: 9 March 2019 6:55 PM GMT)

பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் புலவாமா மாவட்டத்தில் நடத்திய கொடூரமான தாக்குதலில் இந்திய துணை ராணுவ படையினர் 40 பேர் கொல்லப்பட்டனர்.

கராச்சி, 

பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் புலவாமா மாவட்டத்தில் நடத்திய கொடூரமான தாக்குதலில் இந்திய துணை ராணுவ படையினர் 40 பேர் கொல்லப்பட்டனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ராஞ்சியில் நேற்று முன்தினம் நடந்த 3–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் போது இந்திய கிரிக்கெட் வீரர்கள் நமது ராணுவத்துக்குரிய தொப்பியை அணிந்து விளையாடினர். அத்துடன் இந்த போட்டியின் மூலம் கிடைக்கும் தங்களது போட்டி கட்டணத்தை ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு நலநிதியாக வழங்குவதாகவும் இந்திய வீரர்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ராஞ்சி போட்டியில் இந்திய வீரர்கள் ராணுவ வீரர்களுக்குரிய தொப்பியை அணிந்ததற்கு பாகிஸ்தான் அரசாங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா மெமூத் குரேஷி கூறுகையில், ‘இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்கள் அணிக்குரிய தொப்பியை தவிர்த்து ராணுவ தொப்பியை அணிந்து விளையாடியதை உலகமே பார்த்தது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) இதை பார்க்கவில்லையா? இதை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது ஐ.சி.சி.யின் பொறுப்பு.’ என்றார். பாகிஸ்தான் தகவல்துறை மந்திரி பவாத் சவுத்ரி, ராணுவ வீரர்களின் தொப்பியுடன் இந்திய வீரர்கள் வலம் வந்த புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, ‘இது வெறும் கிரிக்கெட் அல்ல. ஜென்டில்மேன் விளையாட்டில் அரசியல் கலக்கப்பட்டு இருக்கிறது. இதன் மீது ஐ.சி.சி. நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்’ என்று கூறியுள்ளார். மேலும் அவர் ‘‘இது போன்ற செயலை இந்திய அணி நிறுத்திக் கொள்ளாவிட்டால், காஷ்மீரில் இந்தியர்களின் அத்துமீறலை உலகுக்கு தெரியப்படுத்தும் வண்ணம் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடுவார்கள். இந்திய அணி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சி.யிடம் முறைப்படி புகார் கொடுக்க வேண்டும்’ என்றார்.

பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், தற்போதைய தேர்வு குழு தலைவருமான இன்ஜமாம் உல்–ஹக் கூறுகையில், ‘நான் ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரர். கிரிக்கெட் மட்டுமே எனது பணி. இது அரசியல் விவகாரம். இதில் தலையிட நான் விரும்பவில்லை. அதே நேரத்தில் கிரிக்கெட்டையும், அரசிலையும் ஒன்றாக கலக்கக்கூடாது’ என்று குறிப்பிட்டார்.

ராணுவ தொப்பியை பயன்படுத்துவது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் முன்கூட்டியே ஐ.சி.சி.யிடம் ஆலோசனை நடத்தியது. இது விதிமீறல் அல்ல என்று உறுதி செய்யப்பட்ட பிறகே அந்த விசே‌ஷ தொப்பியை இந்திய வீரர்கள் அணிந்தனர். ‘இது நலநிதி திரட்டும் முயற்சியின் ஒரு பகுதியாகும்’ என்று ஐ.சி.சி. செய்தி தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.


Next Story