விராட்கோலியுடன் உரசல் வலுக்கிறதா? - ரோகித் சர்மாவின் இன்ஸ்டாகிராம் விலகலால் சந்தேகம்


விராட்கோலியுடன் உரசல் வலுக்கிறதா? - ரோகித் சர்மாவின் இன்ஸ்டாகிராம் விலகலால் சந்தேகம்
x
தினத்தந்தி 27 July 2019 12:12 AM GMT (Updated: 27 July 2019 12:12 AM GMT)

இன்ஸ்டாகிராம் விலகலால் விராட்கோலி, ரோகித் சர்மா இடையே உரசல் வலுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் துணைகேப்டன் ரோகித் சர்மா, கேப்டன் விராட்கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் (சமுக வலைதளம்) பின்தொடரும் முக்கிய நபர்களில் ஒருவராக இருந்து வந்தார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனுஷ்கா சர்மாவை பின் தொடர்வதில் இருந்து ரோகித் சர்மா திடீரென விலகி (அன்-பாலோ) இருக்கிறார். ரோகித் சர்மாவின் இந்த செயல் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலிக்கும், அவருக்கும் இடையே பிளவு நிலவி வருவதாகவும், உலக கோப்பை போட்டி தோல்விக்கு பிறகு இந்த விரிசல் அதிகரித்து இருப்பதாகவும் வெளியான செய்திகளை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்து இருக்கிறது.

இந்திய அணியில் விராட்கோலிக்கு ஆதரவாக சில வீரர்களும், ரோகித் சர்மாவுக்கு பக்கபலமாக சில வீரர்களும் இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. உலக கோப்பை தொடரின் போது ரோகித் சர்மாவின் சில ஆலோசனைகளை விராட்கோலி நிராகரித்ததாகவும், தனக்கு ஆதரவான வீரர்களுக்கே முக்கியத்துவம் கொடுத்ததாகவும் சொல்லப்பட்டது. இதுமட்டுமின்றி குறுகிய வடிவிலான போட்டிக்கு கேப்டன் பதவியை ரோகித் சர்மாவிடம் கொடுக்க வேண்டும் என்ற பேச்சும் எழுந்துள்ளது. ரோகித் சர்மா, விராட்கோலி இடையிலான பனிப்போர் குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி தலைவர் வினோத்ராயிடம் நேற்று கேட்ட போது, ‘இது நீங்களாக உருவாக்கும் கதை’ என்று சுருக்கமாக பதிலளித்தார். அனுஷ்கா சர்மாவை பின் தொடர்வதில் இருந்து ரோகித் சர்மா விலகினாலும், விராட்கோலி, ரோகித் சர்மாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடர்ந்து தான் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story