இங்கிலாந்துக்கு எதிரான தொடரை பாகிஸ்தான் அணி வெல்லும் ; இன்ஜமாம் நம்பிக்கை


இங்கிலாந்துக்கு எதிரான தொடரை பாகிஸ்தான் அணி வெல்லும் ; இன்ஜமாம் நம்பிக்கை
x
தினத்தந்தி 11 Aug 2020 12:00 AM GMT (Updated: 10 Aug 2020 8:06 PM GMT)

இங்கிலாந்தை விட பாகிஸ்தான் அணி சிறப்பானது என்று நான் நினைக்கிறேன் என இன் ஜமாம் தெரிவித்துள்ளார்.

லாகூர், 

மான்செஸ்டரில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. 3 ஆட்டங்கள் கொண்ட இந்த போட்டி தொடரில் 2-வது டெஸ்ட் போட்டி சவுதம்டனில் நாளை மறுநாள் தொடங்குகிறது. 

இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டி தொடர் குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்ஜமாம் உல்ஹக் யூடியூப் சேனலுக்கு அளித்த ஒரு பேட்டியில், ‘இங்கிலாந்தை விட பாகிஸ்தான் அணி சிறப்பானது என்று நான் நினைக்கிறேன். முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வென்று இருக்க வேண்டும். '

நல்ல நிலையில் இருந்து பாகிஸ்தான் அணி தோல்வி கண்டது ஏமாற்றம் அளித்தது. பாகிஸ்தான் அணியால் இன்னும் தொடரை வெல்ல முடியும் என்று நான் நம்புகிறேன். கடினமான தருணத்தில் அணியினரின் உத்வேகத்தில் மாற்றம் ஏற்படக்கூடாது. 2-வது இன்னிங்சில் பேட்டிங்கில் சொதப்பியதால் பாகிஸ்தான் அணியினர் நெருக்கடிக்கு ஆளானார்கள். 

இதுபோன்ற தோல்வியினால் அணி வீரர்களின் உத்வேகம் குறையத்தான் செய்யும். ஆனால் அணி நிர்வாகத்தினர், வீரர்கள் எதிர்மறையான விஷயங்களில் கவனம் செலுத்துவதை தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். முதல் இன்னிங்சில் பெற்ற முன்னிலையை எடுத்து கூறி நம்பிக்கையை அதிகரிக்க செய்ய வேண்டும்’ என்று தெரிவித்தார்.


Next Story