ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து சுரேஷ் ரெய்னா விலகியதால் சென்னை அணிக்கு பின்னடைவு


ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து சுரேஷ் ரெய்னா விலகியதால் சென்னை அணிக்கு பின்னடைவு
x
தினத்தந்தி 30 Aug 2020 12:37 AM GMT (Updated: 30 Aug 2020 12:37 AM GMT)

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து ரெய்னா விலகியதால் அதிர்ச்சி அடைந்துள்ள அந்த அணியின் ஆல்-ரவுண்டர் ஷேன் வாட்சன், ‘ரெய்னா சென்னை அணியின் இதயம் போன்றவர்’ என்று புகழ்ந்துள்ளார்.

துபாய்,

13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் வருகிற 19-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை நடக்கிறது. இதையொட்டி 8 அணிகளைச் சேர்ந்த இந்திய வீரர்கள் அங்கு சென்று தங்களை தயார்படுத்தி வருகிறார்கள். 4-வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் அமீரகம் பயணித்துள்ள டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடுத்தடுத்து பின்னடைவு ஏற்பட்டு வருகிறது. ஏற்கனவே சிலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், மேலும் ஒரு அடியாக துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா சென்னை அணியில் இருந்து விலகியுள்ளார். அவர் 13-வது ஐ.பி.எல்.-ல் முழுமையாக ஆடமாட்டார்.

இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் டுவிட்டர் பக்கத்தில், ‘சுரேஷ் ரெய்னா தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தியா திரும்பி விட்டார். இந்த ஐ.பி.எல். சீசனில் அவர் விளையாடமாட்டார். இந்த கடினமான காலக்கட்டத்தில் ரெய்னாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் ஆதரவாக இருக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

உத்தரபிரதேசத்தை சேர்ந்த 33 வயதான ரெய்னா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கடந்த 15-ந்தேதி திடீரென ஓய்வு பெற்றார். அதைத் தொடர்ந்து சென்னையில் நடந்த பயிற்சி முகாமில் பங்கேற்று தீவிர பேட்டிங் பயிற்சியை மேற்கொண்டார். துபாய் சென்று தனிமைப்படுத்தும் நாட்கள் முடிவதற்குள்ளாகவே தாயகம் திரும்ப வேண்டியதாகி விட்டது. சென்னை அணி மூன்று முறை ஐ.பி.எல். கோப்பையை வென்றதில் முக்கிய பங்கு வகித்துள்ள ரெய்னா விளையாடாதது அந்த அணிக்கு பெரும் இழப்பாக கருதப்படுகிறது.

ஐ.பி.எல்.-ல் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் விராட் கோலிக்கு (5,412 ரன்) அடுத்த இடத்தில் ரெய்னா உள்ளார். அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் லயன்ஸ் அணிக்காக களம் கண்டு ஒரு சதம், 38 அரைசதம், 194 சிக்சர் உள்பட 5,368 ரன்கள் (193 ஆட்டம்) குவித்துள்ளார். இதுவரை நடந்துள்ள எல்லா சீசனிலும் 300-க்கும் மேல் ரன்கள் எடுத்த ஒரே வீரர் ஆவார். ஐ.பி.எல்.-ல் அதிக ஆட்டங்களில் பங்கேற்றவர், அதிக கேட்ச் செய்த பீல்டர் (102 கேட்ச்) ஆகிய சிறப்பும் உண்டு.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 165 ஆட்டங்களில் விளையாடி உள்ளது. அதில் 164 ஆட்டங்களில் ரெய்னா கால்பதித்து இருக்கிறார். துரதிர்ஷ்டவசமாக இந்த முறை முழுமையாக தவற விடுவது ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றமாக அமைந்துள்ளது. சென்னை அணியில் அவரது ஊதியம் ரூ.11 கோடி ஆகும். அவருக்கு பதிலாக மாற்று வீரரை சென்னை அணி நிர்வாகம் விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யூசுப் பதான், ஹனுமா விஹாரி, கர்நாடக பேட்ஸ்மேன் ரோகன் கடாம் உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபடுகிறது.

Next Story