ஐ.பி.எல். கிரிக்கெட்: ரெய்னாவை தக்கவைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் அணியில் சுமித் விடுவிப்பு


ஐ.பி.எல். கிரிக்கெட்: ரெய்னாவை தக்கவைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் அணியில் சுமித் விடுவிப்பு
x
தினத்தந்தி 21 Jan 2021 1:30 AM GMT (Updated: 21 Jan 2021 1:30 AM GMT)

அடுத்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான சென்னை அணியில் சுரேஷ் ரெய்னா தக்கவைக்கப்பட்டு உள்ளார். ராஜஸ்தான் அணியில் சுமித்தும், பஞ்சாப் அணியில் மேக்ஸ்வெல்லும் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

மும்பை,

14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் நடக்கிறது. அனேகமாக பிப்ரவரி 11-ந்தேதி ஏலம் நடக்க வாய்ப்பு உள்ளது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை 20-ந்தேதிக்குள் (நேற்று) சமர்ப்பிக்க ஒவ்வொரு அணிகளுக்கும் ஐ.பி.எல். நிர்வாகம் கெடு விதித்திருந்தது. இதையடுத்து வீரர்களின் பட்டியல் ஐ.பி.எல். நிர்வாகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இதன்படி டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சுரேஷ் ரெய்னாவை தக்க வைத்திருக்கிறது. கடந்த ஐ.பி.எல். போட்டியில் கொரோனா பீதியால் கடைசி நேரத்தில் ரெய்னா விலகினார். அவருக்கும், டோனிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல்கள் கசிந்தன. ஆனால் இப்போது டோனியின் விருப்பத்தின் பேரிலேயே 34 வயதான ரெய்னா சென்னை அணியில் தக்க வைக்கப்பட்டிருக்கிறார்.

கடந்த ஐ.பி.எல்-ல் மோசமாக ஆடி கடும் விமர்சனத்திற்குள்ளான கேதர் ஜாதவ், முரளிவிஜய், பியுஷ் சாவ்லா மற்றும் ஹர்பஜன்சிங், மோனுகுமார் சிங், ஷேன் வாட்சன் (இவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்) ஆகிய 6 பேரை சென்னை அணி நிர்வாகம் கழற்றிவிட்டுள்ளது. இதன் மூலம் இந்த ஏலத்தில் சென்னை அணிக்கு ரூ.22.9 கோடி செலவு செய்யும் அளவுக்கு இருப்பு வந்துள்ளது. ஒரு வெளிநாட்டவர் உள்பட 7 வீரர்களை வாங்கலாம்.

டோனி, சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, ஜெகதீசன், பாப் டு பிளிஸ்சிஸ், ருதுராஜ் கெய்க்வாட், சாம் கர்ரன், ரவீந்திர ஜடேஜா, வெய்ன் பிராவோ, மிட்செல் சான்ட்னெர், ஹேசில்வுட், ஷர்துல் தாகூர், கரண் ஷர்மா, கே.எம்.ஆசிப், இம்ரான் தாஹிர், சாய் கிஷோர், தீபக் சாஹர், நிகிடி ஆகியோர் சென்னை அணியில் நீடிக்கிறார்கள்.

கடந்த ஐ.பி.எல்.-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது. அந்த அணியின் கேப்டன் ஸ்டீவன் சுமித்தின் (ஆஸ்திரேலியா) பேட்டிங்கும் பெரிய அளவில் (14 ஆட்டத்தில் 311 ரன்) இல்லை. இதனால் அவரை அந்த அணி நிர்வாகம் அதிரடியாக விடுவித்துள்ளது. ரூ.12½ கோடி ஊதியம் பெற்ற சுமித் இனி ஏலப்பட்டியலில் இடம் பெறுவார். அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனை கேப்டனாக ராஜஸ்தான் அணி நிர்வாகம் நியமித்துள்ளது. அத்துடன் இலங்கை முன்னாள் வீரர் சங்கக்கரா அந்த அணிக்கான கிரிக்கெட் இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார். சுமித்தை தவிர, வருண் ஆரோன், ஒஷானே தாமஸ், அங்கித் ராஜ்புட், ஆகாஷ் சிங், டாம் கர்ரன், அனிருதா ஜோஷி, ஷசாங் சிங் ஆகியோரும் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.

விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி அதிகபட்சமாக 10 வீரர்களை வேண்டாம் என்று ஒதுக்கியுள்ளது. இவர்களில் ஆரோன் பிஞ்ச், கிறிஸ் மோரிஸ், மொயீன் அலி, ஷிவம் துபே, உமேஷ் யாதவ், ஸ்டெயின் ஆகியோரும் அடக்கம். அதே சமயம் முன்னணி வீரர்களான விராட் கோலி, டிவில்லியர்ஸ், வாஷிங்டன் சுந்தர், தேவ்தத் படிக்கல், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல், கேன் ரிச்சர்ட்சன் உள்ளிட்டோர் மாற்றமின்றி அந்த அணியில் தொடருகிறார்கள்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் கழற்றிவிடப்பட்ட வீரர்களில் கடந்த முறை ரூ.10¾ கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கிளைன் மேக்ஸ்வெல், கருண் நாயர், ஷெல்டன் காட்ரெல், கிருஷ்ணப்பா கவுதம், முஜீப் ரகுமான், ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் முக்கியமானவர்கள் ஆவர். மேக்ஸ்வெல் கடந்த சீசனில் ஒரு சிக்சர் கூட அடிக்காததால் அவரை வைத்துக் கொள்ள அந்த அணி நிர்வாகம் விரும்பவில்லை. அதேநேரம் லோகேஷ் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியில் 41 வயதான கிறிஸ் கெய்லுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எம்.சித்தார்த், நிகில் நாயக், சித்தேஷ் லாட், கிறிஸ் கிரீன், டாம் பான்டன், நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி மெக்லெனஹான், ஜேம்ஸ் பேட்டின்சன், மலிங்கா, நாதன் கவுல்டர்-நிலே, ரூதர்போர்டு, திக்விஜய் தேஷ்முக், பல்வந்த் ராய்சிங், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அலெக்ஸ் கேரி, கீமோ பால், லமிச்சன்னே, துஷர் தேஷ்பாண்டே, மொகித் ஷர்மா, ஜாசன் ராய், ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி சஞ்சய் யாதவ், சந்தீப், பில்லி ஸ்டான்லேக், பாபியன் ஆலென், யாரா பிரித்விராஜ் ஆகியோரையும் விடுவித்துள்ளது.

Next Story