விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: கர்நாடகா, குஜராத் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி


சதம் அடித்த கர்நாடக அணி வீரர் தேவ்தத் படிக்கல்.
x
சதம் அடித்த கர்நாடக அணி வீரர் தேவ்தத் படிக்கல்.
தினத்தந்தி 9 March 2021 1:16 AM GMT (Updated: 9 March 2021 1:16 AM GMT)

விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கர்நாடகா, குஜராத் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின.

சிறப்பான தொடக்கம்

விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. டெல்லியில் உள்ள பாலம் ‘ஏ’ மைதானத்தில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் கர்நாடக அணி, கேரளாவை சந்தித்தது.

‘டாஸ்’ ஜெயித்த கேரள அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த கர்நாடக அணியின் தொடக்க ஆட்டக்காரகளாக கேப்டன் ரவிகுமார் சமார்த், தேவ்தத் படிக்கல் ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் நிலைத்து நின்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு அருமையான அடித்தளம் அமைத்து கொடுத்தனர்.

தேவ்தத் படிக்கல் சாதனை

அணியின் ஸ்கோர் 249 ரன்னாக உயர்ந்த போது தொடக்க ஜோடி பிரிந்தது. தேவ்தத் படிக்கல் 119 பந்துகளில் 10 பவுண்டரி, 2 சிக்சருடன் 101 ரன்கள் எடுத்த நிலையில் பாசில் பந்து வீச்சில் ‘கிளீன் போல்டு’ ஆனார். இந்த போட்டி தொடரில் தேவ்தத் படிக்கல் தொடர்ச்சியாக விளாசிய 4-வது சதம் இதுவாகும். இதன் மூலம் அவர் ‘லிஸ்ட் ஏ’ போட்டியில் (எல்லா ஒருநாள் போட்டிகளிலும்) தொடர்ந்து 4 சதம் அடித்த முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார். ரவிகுமார் சமார்த் 192 ரன்னில் (158 பந்து, 22 பவுண்டரி, 3 சிக்சர்) கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

50 ஓவர்களில் கர்நாடகா அணி 3 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் குவித்தது. மனிஷ் பாண்டே 34 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கேரள அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் பாசில் 3 விக்கெட் சாய்த்தார். ஸ்ரீசாந்த் 73 ரன்கள் விட்டுக்கொடுத்து விக்கெட் எதுவும் கைப்பற்றவில்லை.

கர்நாடக அணி வெற்றி

இதனை அடுத்து இலக்கை நோக்கி ஆடிய கேரள அணி, கர்நாடக வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 43.4 ஓவர்களில் 258 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இதனால் கர்நாடக அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது. அதிகபட்சமாக வத்சல் கோவிந்த் 92 ரன்னும், முகமது அசாருதீன் 52 ரன்னும் சேர்த்தனர். கர்நாடக அணி தரப்பில் ரோனித் மோர் 5 விக்கெட்டும், ஸ்ரீரேயாஸ் கோபால், கிருஷ்ணப்பா கவுதம் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

டெல்லி அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நடந்த மற்றொரு கால்இறுதியில் குஜராத்-ஆந்திரா அணிகள் சந்தித்தன. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த குஜராத் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 299 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் பிரியங் பன்சால் 134 ரன்கள் (131 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தார்.

அரைஇறுதியில் குஜராத்

பின்னர் 300 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆந்திர அணி 41.2 ஓவர்களில் 182 ரன்னில் சுருண்டது. எனவே குஜராத் அணி 117 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரைஇறுதிக்குள் நுழைந்தது. அதிகபட்சமாக ரிக்கி புய் 67 ரன்கள் எடுத்தார். குஜராத் அணி தரப்பில் அஜான் நாக்வாஸ்வாலா 4 விக்கெட்டும், பியுஷ் சாவ்லா 3 விக்கெட்டும் சாய்த்தனர்.

இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் கால்இறுதி ஆட்டங்களில் உத்தரபிரதேசம்-டெல்லி, மும்பை-சவுராஷ்டிரா (காலை 9 மணி) அணிகள் மோதுகின்றன.


Next Story