40 வயதிலும் தொடர்ந்து விளையாடுவது ஏன்? ஹர்பஜன்சிங் பேட்டி


40 வயதிலும் தொடர்ந்து விளையாடுவது ஏன்? ஹர்பஜன்சிங் பேட்டி
x
தினத்தந்தி 31 March 2021 8:05 PM GMT (Updated: 31 March 2021 8:05 PM GMT)

இந்திய மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் இந்த ஆண்டு ஐ.பி.எல் கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாட உள்ளார்.

கொல்கத்தா, 

இந்திய மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் இந்த ஆண்டு ஐ.பி.எல் கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். அவரை ஏலத்தில் ரூ.2 கோடிக்கு அந்த அணி வாங்கியது. சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 1998-ம் ஆண்டு அறிமுகமாகி இன்னும் களத்தில் வலம் வரும் ஹர்பஜன்சிங் ஐ.பி.எல். போட்டியில் 150 விக்கெட்டுகள் (160 ஆட்டம்) வீழ்த்திய அனுபவசாலி ஆவார். அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஹர்பஜன்சிங் ஏன் இன்னும் விளையாடிக்கொண்டிருக்கிறார் என்று மக்கள் நினைக்கலாம். ஆனால் என்னை பொறுத்தவரை நான் விளையாட விரும்புகிறேன். அதனால் தான் விளையாடுகிறேன். யாருக்காகவும் நான் எதையும் நிரூபிக்க வேண்டிய தேவையில்லை. நன்றாக விளையாட வேண்டும், களத்தில் உற்சாகமாக செயல்பட வேண்டும் என்பதே எனது நோக்கம். கிரிக்கெட் விளையாடுவது தான் இன்னும் எனக்கு மனநிறைவை தருகிறது.

நான் 20 வயது வீரர் கிடையாது. அதனால் முன்பு போல் பயிற்சியில் ஈடுபட முடியாது. ஆனாலும் ஒரு 40 வயது வீரராக நான் உடல்தகுதியுடன் இருப்பதை அறிவேன். இந்த லெவனில் சாதிப்பதற்கு என்ன தேவையோ அதை நிச்சயம் செய்வேன்.

கடந்த ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து விலகியது ஏன் என்று கேட்கிறீர்கள். அப்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. அதனால் குடும்பத்தை நினைத்து மிகவும் கவலைப்பட்டேன். அது மட்டுமின்றி ஐக்கிய அரபு அமீரகத்தில் விளையாடி முடித்து தாயகம் திரும்பியதும் கடினமான தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டிய நிலைமை இருந்தது. அதனால் தான் விலக முடிவு செய்தேன். ஆனால் இந்த முறை ஐ.பி.எல். கிரிக்கெட் இந்தியாவில் நடக்கிறது. அதுமட்டுமின்றி கட்டுப்பாடுகளுடன் கூடிய புதிய சூழலில் வாழ பழகி விட்டோம். கொரோனா தடுப்பூசியும் வந்து விட்டது. அது மட்டுமின்றி எனது மனைவி கீதாவும் இந்த முறை கட்டாயம் விளையாட வேண்டும் என்று கூறினார்.

ஒவ்வொரு சீசன் முடிந்ததும் தொடர்ந்து விளையாட முடியுமா முடியாதா? என்று சுயபரிசோதனை செய்து அதற்கு ஏற்ப முடிவு செய்வேன். தொடர்ந்து நல்ல நிலையில் இருப்பதாக உணர்ந்தால் அடுத்த ஆண்டும் களத்தில் என்னை பார்க்கலாம்.

இவ்வாறு ஹர்பஜன்சிங் கூறினார்.

2019-ம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு முதல்முறையாக சவாலான கிரிக்கெட் போட்டிக்கு திரும்பும் ஹர்பஜன்சிங் தனது அனுபவத்தின் மூலம் சிறப்பாக செயல்பட முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.


Next Story