3-வது டி-20 கிரிக்கெட் போட்டி; இலங்கைக்கு 82 ரன்களை இலக்காக நிர்ணையித்தது இந்தியா


3-வது டி-20 கிரிக்கெட் போட்டி; இலங்கைக்கு 82 ரன்களை இலக்காக நிர்ணையித்தது இந்தியா
x
தினத்தந்தி 29 July 2021 4:49 PM GMT (Updated: 29 July 2021 4:49 PM GMT)

இலங்கைக்கு எதிரான டி-20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 81 ரன்கள் எடுத்துள்ளது.

கொழும்பு,

ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் ஆட்டத்தில் இந்திய அணியும், 2-வது ஆட்டத்தில் இலங்கை அணியும் வெற்றி பெற்றன. இதையடுத்து தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. 

இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி முதலாவதாக பேட்டிங் செய்தது. இலங்கை அணியில் உதனாவிற்கு பதிலாக பாத்தும் நிசாங்கா அணியில் இடம்பெற்றுள்ளார். இந்திய அணியில் காயத்தால் அவதிப்பட்டு வரும் நவ்தீப் சயினிக்கு பதிலாக சந்தீப் வாரியர் அணியில் சேக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். தவான் முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ரமேஷ் மெண்டிஸ் சுழலில் தேவ்தத் படிக்கல் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்சன் ரன் ஏதும் எடுக்காமல் வனிந்து ஹசரங்காவின் பந்துவீச்சில் வீழ்ந்தார். அதே ஓவரில் ருதுராஜ் கெய்க்வாடும் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பிறகு, நிதிஷ் ராணாவும் 6 ரன்களுக்கு தசுன் ஷனாகாவின் அற்புதமான கேட்ச்சால் ஆட்டமிழந்தார்.

நீண்ட நேரம் களத்திலிருந்த புவனேஷ்வர் குமார் 32 பந்துகளில் 16 ரன்கள் எடுத்தார். அதன்பிறகு வந்தவர்களும் அதிக நேரம் நிலைத்து நிற்கவில்லை. குல்தீப் யாதவ் மட்டும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 23 ரன்கள் எடுத்தார். இதனால் 20 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 81 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இலங்கை தரப்பில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஹசரங்கா 4 விக்கெட்டுகளையும், ஷனாகா 2 விக்கெட்டுகளையும், மெண்டிஸ் மற்றும் சமீரா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். தற்போது 82 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடி வருகிறது. 

Next Story