20 ஓவர் உலக கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு அதிக வாய்ப்பு: பாகிஸ்தான் முன்னாள் கேப்டன்


20 ஓவர் உலக கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு அதிக வாய்ப்பு: பாகிஸ்தான் முன்னாள் கேப்டன்
x
தினத்தந்தி 21 Oct 2021 10:42 PM GMT (Updated: 21 Oct 2021 10:42 PM GMT)

20 ஓவர் உலக கோப்பையை வெல்வதற்கு இந்தியாவுக்கே அதிக வாய்ப்பு உள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்ஜமாம் கூறியுள்ளார்.

இன்ஜமாம் பேட்டி

20 ஓவர் உலக கோப்பை குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்ஜமாம் உல்-ஹக் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

எந்த ஒரு தொடரையும் குறிப்பிட்ட அணி தான் வெல்லும் என்று உறுதிப்பட சொல்ல முடியாது. ஆனால் ஒரு அணிவெற்றி பெறுவதற்கு எவ்வளவு வாய்ப்பு உள்ளது என்பதை சொல்ல முடியும். இந்த உலக கோப்பையை வெல்வதற்கு, குறிப்பாக இத்தகைய சீதோஷ்ண நிலையில் மற்ற எல்லா அணிகளை காட்டிலும் இந்தியாவுக்கே மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது என்பதே எனது கணிப்பு. இந்தியாவிடம் 20 ஓவர் கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர்.

பயிற்சி கிரிக்கெட்டில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை சிரமமின்றி எளிதில் தோற்கடித்தது. அதுவும் விராட் கோலியின் பங்களிப்பு இல்லாமலேயே 154 ரன்களை ‘சேசிங்’ செய்துவிட்டனர். இது போன்ற இந்திய துணை கண்டத்து ஆடுகளங்களில் 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியா உலகின் மிகவும் அபாயகரமான அணியாகும்.

இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம்

இந்த உலக கோப்பையில் இந்தியாவும், பாகிஸ்தானும் சூப்பர்-12 சுற்றில் (நாளை மறுதினம்) சந்திக்கின்றன. இது இறுதிப்போட்டிக்கு முன்பாக நடக்கும் ஒரு இறுதிப்போட்டி மாதிரி. இந்த ஆட்டத்திற்கு உள்ள மிகையான எதிர்பார்ப்பும், அதீத ஆர்வமும் வேறு எந்த ஆட்டத்துக்கும் இருக்காது. 2017-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் கூட இந்தியாவும், பாகிஸ்தானும் சந்தித்த இரண்டு ஆட்டங்களையும் இறுதிப்போட்டி போன்றே உணர்ந்தோம்.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியின் உத்வேகமும், மனஉறுதியும் அதிகரிக்கும். அத்துடன் நெருக்கடியும் 50 சதவீதம் குறைந்து விடும்.

இவ்வாறு இன்ஜமாம் கூறினார்.

வாகன்-ஹைடன் கருத்து

இதே கருத்தை இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகனும் முன்வைத்துள்ளார். பயிற்சி ஆட்டங்களில் இந்தியா விளையாடிய விதத்தை பார்க்கும் போது, இந்த உலக கோப்பையை வசப்படுத்துவதற்கு இந்தியாவுக்கே இப்போது வாய்ப்பு அதிகமாக தென்படுகிறது என்று குறிப்பிட்டார்.

ஆஸ்திரேலிய முன்னாள் வீரரும், இந்த உலக கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் அணியின் பேட்டிங் ஆலோசகருமான மேத்யூ ஹைடன் கூறுகையில், ‘சமீபத்தில் இதே அமீரகத்தில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டோனியும், இயான் மோர்கனும் தனிப்பட்ட முறையில் சோபிக்கவில்லை. ஆனால் இங்குள்ள சூழலில் தங்களது வீரர்களை திறம்பட வழிநடத்தி இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றனர். இதே போல் 20 ஓவர் உலக கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தில் கேப்டன்ஷிப் முக்கிய பங்கு வகிக்கும்.

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முன்னணி பேட்ஸ்மேனாகவும் இருப்பதால் அவருக்கு கூடுதல் நெருக்கடி இருக்கும். இந்தியாவின் முக்கிய இலக்கு அவராகத் தான் இருப்பார். அணி சாதிக்க கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் அவர் தனது பணியை நிறைவு செய்ய வேண்டியது அவசியமாகும். இந்திய வீரர் லோகேஷ் ராகுலின் வளர்ச்சியை ஏறக்குறைய அவரது இளம் வயதில் இருந்தே பார்த்து வருகிறேன். பாகிஸ்தான் அணிக்கு அவர் தான் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார்’ என்றார்.


Next Story