முகமது ஷமிக்கு ஆதரவாக குரல் கொடுத்த பாகிஸ்தான் வீரர்
பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் இந்திய பவுலர் முகமது ஷமிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.
உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் தோல்விக்கு வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் மோசமான பந்து வீச்சே (3.5 ஓவர்களில் 43 ரன்களை வாரி வழங்கினார்) காரணம் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் அவரை இழிவுப்படுத்தினர். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரை கடுமையாக விமர்சித்து மதரீதியிலான கருத்துகளை பதிவு செய்தனர். அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் எழுதி ரசிகர்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். முகமது ஷமிக்கு சச்சின் தெண்டுல்கர், ஷேவாக், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்பட பலரும் ஆதரவு தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 79 ரன்கள் குவித்த பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானும், இந்திய பவுலர் ஷமிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இது போன்ற நெருக்கடிகள், போராட்டம், தியாகங்கள் இவற்றை எல்லாம் கடந்து தான் ஒரு வீரர் தங்களது தேசத்துக்காக விளையாடுகிறார். முகமது ஷமி ஒரு நட்சத்திர வீரர். உலகின் சிறந்த பவுலர்களில் ஒருவர். உங்களது நட்சத்திர வீரர்களுக்கு மதிப்பு அளியுங்கள். இந்த விளையாட்டு மக்களிடையே ஒற்றுமையை கொண்டு வர வேண்டுமே தவிர, பிளவை ஏற்படுத்த கூடாது’ என்று கூறியுள்ளார்.
Related Tags :
Next Story