ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: ஸ்ரேயஸ் அய்யர் இடத்தில் இவரை களம் இறக்குங்கள் - தினேஷ் கார்த்திக்


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: ஸ்ரேயஸ் அய்யர் இடத்தில் இவரை களம் இறக்குங்கள்  - தினேஷ் கார்த்திக்
x

Image Courtesy: AFP 

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஸ்ரேயஸ் அய்யர் இடத்தில் இந்த வீரரை ஆட வையுங்கள் என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

மும்பை,

4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்துள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் வருகிற 9-ந்தேதி நாக்பூரில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் பிப்ரவரி 17-21 வரை டெல்லியிலும், 3-வது டெஸ்ட் மார்ச் 1 முதல் 5 வரை தர்மசாலாவிலும், 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் மார்ச் 9 முதல் 13 வரை அகமதாபாத்திலும் நடக்கிறது.

அதைத்தொடர்ந்து ஒருநாள் போட்டிகள் மார்ச் 17, 19 மற்றும் 22-ந்தேதிகளில் மும்பை, விசாகப்பட்டினம், சென்னை ஆகிய இடங்களில் நடக்கிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்திலும், இந்திய அணி 2வது இடத்திலும் உள்ளது. இந்தியா இறுதி சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் ஆஸ்திரேலியாவிடம் வெற்றி பெற்றே தீர வேண்டும்.

இதற்காக இந்திய அணி நாக்பூரிலும், ஆஸ்திரேலிய அணி பெங்களூருவிலும் பயிற்சி முகாம்களை தொடங்கிவிட்டனர். இந்த நிலையில் இந்திய வீரர்கள் இன்று பயிற்சியை தொடங்கி உள்ளனர். வீரர்கள் பயிற்சியில் ஈடுபடும் புகைப்படத்தை பிசிசிஐ வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இடம் பெற்றிருந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயஸ் அய்யர் காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் ஆட மாட்டார் என தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்ப்ம் வெளியாகவில்லை.

இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டியில் ஸ்ரேயஸ் அய்யர் ஆடவில்லை என்றால் அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவை ஆட வையுங்கள் என இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது,

ஒருவேளை ஸ்ரேயஸ் அய்யர் உடற்தகுதியை எட்டவில்லை என்றால் அந்த இடத்திற்கு சூர்யகுமார் யாதவ் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தயாராக உள்ளனர். என்னைபொறுத்தவரை அந்த இடத்தில் நான் சூர்யகுமார் யாதவை ஆட வைப்பேன். ஏனெனில் அவர் சுழற்பந்து வீச்சை அபாரமாக ஆட கூடிய வீரர் மற்றும் நாம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் விளையாட உள்ளோம். அவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். அவர் சிறப்பான பார்மில் உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story