மும்பை ரசிகர்கள் முழுமையான ஆதரவு கொடுத்தால் பதிலுக்கு...- ஹர்திக் பாண்ட்யா


மும்பை ரசிகர்கள் முழுமையான ஆதரவு கொடுத்தால் பதிலுக்கு...- ஹர்திக் பாண்ட்யா
x

image courtesy: AFP

தினத்தந்தி 6 March 2024 8:44 AM GMT (Updated: 6 March 2024 10:48 AM GMT)

2 வருடங்கள் கழித்து மீண்டும் மும்பை அணிக்காக விளையாடுவது சொந்த வீட்டுக்கு வருவது போன்ற உணர்வை கொடுப்பதாக ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.

மும்பை,

இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதன் 17-வது சீசன் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடரில் 10 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.

இதுவரை நடந்து முடிந்துள்ள ஐ.பி.எல் தொடர்களில் அதிகபட்சமாக சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை கோப்பைகளை வென்றுள்ளன. அதன்படி, நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் 22ம் தேதி ஆரம்பமாகிறது. முதல் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. சென்னையில் இந்த போட்டியானது இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.

முன்னதாக 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் மும்பை இந்தியன்ஸ் இந்த வருடம் ரோகித் சர்மாவை கழற்றி விட்டு ஹர்திக் பாண்ட்யாவை புதிய கேப்டனாக அறிவித்துள்ளது. அதற்கு ஏற்கனவே ஏராளமான மும்பை ரசிகர்கள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். இதற்கு காரணமாக வருங்காலத்தை கருத்தில் கொண்டு ஹர்திக் பாண்ட்யாவை தங்களுடைய கேப்டனாக நியமித்ததாக மும்பை நிர்வாகம் அறிவித்திருந்தது.

அதற்கு மும்பை ரசிகர்களில் 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒரே நாளில் அந்த அணியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடர்வதை நிறுத்தி உச்சகட்ட எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அந்த சூழ்நிலையில் குஜராத்துக்கு முதல் வருடத்திலேயே கேப்டனாக கோப்பையை வென்று கொடுத்தது போல் மும்பைக்கும் ஹர்திக் பாண்டியா சாம்பியன் பட்டத்தை வென்று கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இந்நிலையில் 2 வருடங்கள் கழித்து மீண்டும் தம்மை வளர்த்த மும்பை அணிக்காக விளையாடுவது சொந்த வீட்டுக்கு வருவது போன்ற உணர்வை கொடுப்பதாக ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார். எனவே இம்முறை மும்பை ரசிகர்கள் தமக்கு முழுமையான ஆதரவு கொடுத்தால் பதிலுக்கு கோப்பையை வென்று கொடுப்பேன் என்று பாண்ட்யா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "ரசிகர்களின் அன்பு மற்றும் ஆதரவுக்காக நான் நன்றியுடையவனாக இருக்கிறேன். இது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஆசீர்வாதமாகும். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பி வருவது அனைத்தும் துவங்கிய இடத்திற்கு வருவதைப் போன்ற உணர்வை கொடுக்கிறது. பரோடாவில் இருந்து மும்பை வந்த எனக்கு இந்த நகரம் வளர்ச்சியை கற்றுக் கொடுத்து என்னுள் அடக்கத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

இந்த நகரம் அன்பு மற்றும் பாடங்களை கற்றுக் கொடுத்து இன்று ஒரு வீரராக இருக்கும் என்னை பட்டைத் தீட்டியது. மும்பை எப்போதும் சிறப்பாக இருப்பதற்கு உங்களுக்கு சவால் கொடுக்கும். தற்போது ஐ.பி.எல். தொடரில் நான் 2 வருடங்கள் கழித்து மீண்டும் வீட்டுக்கு வந்துள்ளேன். இங்கே ரசிகர்களிடம் நம்மை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்வதற்கு தேவையான அதே ஆதரவை நான் எதிர்பார்க்கிறேன். அந்த ஆதரவை உறுதியாகக் கொடுத்தால் ஒவ்வொரு ஆதரவாளரும் மகிழ்ந்திருக்கும் ஒரு சீசனை நான் உறுதி செய்வேன். இது நாம் அனைவரும் சேர்ந்து ரசிக்கும் பயணமாகும்" என்று கூறினார்.


Next Story