ஐ.பி.எல்.: கில் அதிரடி...பஞ்சாப் அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த குஜராத்


ஐ.பி.எல்.: கில் அதிரடி...பஞ்சாப் அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த குஜராத்
x

image courtesy: twitter/@IPL

குஜராத் அணியில் அதிகபட்சமாக சுப்மன் கில் 89 ரன்கள் அடித்து அசத்தினார்.

அகமதாபாத்,

10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன்படி இன்று இரவு 7.30 மணிக்கு குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் 17-வது லீக் ஆட்டத்தில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற பஞ்சாப் அணி பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக சஹா மற்றும் கில் ஆகியோர் களமிறங்கினர்.

இவர்களில் சஹா 11 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து இந்த சீசனில் முதல் முறையாக களமிறங்கிய வில்லியம்சன் , தனது பங்குக்கு 22 ரன்கள் அடித்த நிலையில் அவுட்டானார். மறுமுனையில் கில் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார்.

பின்னர் களமிறங்கிய சாய் சுதர்சன் இந்த முறை அதிரடியாக விளையாடினார். அவர் 19 பந்துகளில் 33 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். சுப்மன் கில் நிலைத்து விளையாடி அணியை வலுவான இலக்கை நோக்கிகொண்டு சென்றார். இறுதி கட்டத்தில் ராகுல் திவேட்டியா அதிரடியாக விளையாடி 8 பந்துகளில் 23 ரன்கள் அடித்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் குஜராத் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக கில் 89 ரன்கள் அடித்து அசத்தினார். பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக ரபடா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 200 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி பஞ்சாப் பேட்டிங் செய்ய உள்ளது.


Next Story