ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக 5 ஆயிரம் ரன்களை கடந்து தோனி சாதனை


ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக 5 ஆயிரம் ரன்களை கடந்து தோனி சாதனை
x

image courtesy: IndianPremierLeague twitter

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் 5 ஆயிரம் ரன்களை கடந்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை தோனி படைத்துள்ளார்.

லக்னோ,

17-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் 34-வது லீக் ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் ஆடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரகானே மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் களம் இறங்கினர். இதில் ரச்சின் ரவீந்திரா ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் கெய்க்வாட் 17 ரன்களில் அவுட் ஆனார். இதையடுத்து ரகானேவுடன் ரவீந்திர ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். ரகானே 36 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களம் இறங்கிய ஷிவம் துபே 3 ரன், இம்பேக்ட் வீரர் சமீர் ரிஸ்வி 1 ரன் எடுத்து அவுட் ஆகினர்.

இதையடுத்து ஜடேஜாவுடன் மொயீன் அலி ஜோடி சேர்ந்தார். ஒருபுறம் நிலைத்து நின்று ஆடிய ஜடேஜா 34 பந்தில் அரைசதம் அடித்தார். மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மொயீன் அலி 20 பந்தில் 30 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். தொடர்ந்து களமிறங்கிய தோனி, 9 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. ஜடேஜா 57 ரன்களுடனும் தோனி 28 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி பேட்டிங் செய்து வருகிறது.

இந்த நிலையில் இந்த போட்டியில் 28 ரன்கள் எடுத்த தோனி, ஐ.பி.எல் கிரிக்கெட்டில் 5 ஆயிரம் ரன்களை கடந்த முதல் விக்கெட் கீப்பர் என்ற புதிய சாதனை படைத்தார். அவர் 5,023 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து பெங்களூரு அணியில் விளையாடி வரும் தினேஷ் கார்த்திக் 4,369 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.


Next Story