மும்பை அணியை மறைமுகமாக விமர்சித்த பும்ரா


மும்பை அணியை மறைமுகமாக விமர்சித்த பும்ரா
x

கோப்புப்படம் 

மும்பை அணியை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் பும்ரா இவ்வாறு பதிவிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, ஐ.சி.சி. டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசையில் முதல் முறையாக 'நம்பர் ஒன்' இடத்துக்கு முன்னேறியுள்ளார். டெஸ்ட் தரவரிசையில் 'நம்பர் ஒன்' இடத்தை பிடித்த முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற வரலாற்று சாதனையையும் படைத்திருக்கிறார். அவருக்கு வீரர்கள், ஐ.சி.சி. நிர்வாகிகள், மும்பை இந்தியன்ஸ் அணியினர், ரசிகர்கள் சமூக வலைதளம் மூலம் வாழ்த்து தெரிவித்தனர்.

இதையொட்டி பும்ரா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் வித்தியாசமான ஒரு பதிவை வெளியிட்டார். அதில், 'நமக்கு ஆதரவு கொடுக்க ஒன்றிரண்டு நபர்கள் மட்டுமே இருப்பார்கள். ஆனால் நாம் ஏதேனும் சாதனை செய்தால் வாழ்த்து தெரிவிக்க ஆயிரக்கணக்கில் வருவார்கள்' என்று குறிப்பிட்டு இருந்தார். அவர் எதை மனதில் வைத்து இவ்வாறு கூறியிருக்கிறார் என்பது தெரியவில்லை.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியை அவர் எதிர்பார்த்து இருந்ததாகவும், ஆனால் குஜராத் அணியில் இருந்து வாங்கப்பட்ட ஹர்திக் பாண்ட்யாவுக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டதால் அதிருப்திக்குள்ளான அவர் மும்பை அணியை மறைமுகமாக விமர்சிக்கும் வகையிலேயே இவ்வாறு பதிவிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.


Next Story