நான் இந்திய அணியின் தேர்வாளராக இருந்தால் அவர்தான் என்னுடைய முதல் தேர்வு - கெவின் பீட்டர்சன்


நான் இந்திய அணியின் தேர்வாளராக இருந்தால் அவர்தான் என்னுடைய முதல் தேர்வு - கெவின் பீட்டர்சன்
x
தினத்தந்தி 28 April 2024 8:22 AM GMT (Updated: 28 April 2024 8:22 AM GMT)

டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் இடத்திற்கு கடுமையான போட்டி நிலவுகிறது.

புதுடெல்லி,

9-வது 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் 1-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அதில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்படுவதற்கு சஞ்சு சாம்சன், கே.எல். ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரிடம் கடுமையான போட்டி காணப்படுகிறது.

இதற்கிடையே தினேஷ் கார்த்திக், இஷான் கிஷன் போன்ற வீரர்களும் விக்கெட் கீப்பராக விளையாடுவதற்கு போட்டியிட்டு வருகின்றனர். அதில் ரிஷப் பண்ட் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் நடப்பு ஐ.பி.எல். தொடரில் அபாரமாக விளையாடி இதுவரை இருவரும் தலா 2 ஆட்ட நாயகன் விருதுகளை வென்றுள்ளனர்.

சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணியில் 3-வது இடத்தில் 385 ரன்கள் குவித்து நல்ல பார்மில் இருக்கிறார். ஆனால் இந்திய அணியில் 3-வது இடத்தில் விராட் கோலி விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் காயத்திலிருந்து குணமடைந்த ரிஷப் பண்ட் டெல்லி அணிக்காக மிடில் ஆர்டரில் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் தாமாக இருந்தால் சஞ்சு சாம்சனை முதல் ஆளாக டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் தேர்ந்தெடுப்பேன் என இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-

"சஞ்சு சாம்சன் செல்ல வேண்டும். இன்னும் சில வாரங்களில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவுக்கு செல்லவிருக்கும் இந்திய அணியின் விமானத்தில் அவர் இருக்க வேண்டும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவர் ரன் எடுக்கும் விதம் மற்றும் பேட்டிங் செய்யும் சூழ்நிலை சிறப்பாக இருக்கிறது. எனவே நான் தேர்வாளராக இருந்தால் எனது முதல் தேர்வுகளில் அவர் ஒருவராக இருப்பார்" என்று கூறினார்.


Next Story