இந்த தொடர் முழுவதுமே நாங்கள் பயமற்ற ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்தோம் - சூர்யகுமார் யாதவ்


இந்த தொடர் முழுவதுமே நாங்கள் பயமற்ற ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்தோம் - சூர்யகுமார் யாதவ்
x

image courtesy; twitter/ @BCCI

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் சதமடித்து அசத்தினார்.

ஜோகன்ஸ்பர்க்,

இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையில் முதலாவதாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. இதில் முதல் டி20 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற 2வது டி20 போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான தொடரை நிர்ணயிக்கும் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவின் சதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் தென் ஆப்பிரிக்கா 13.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 95 ரன்களில் ஆல் ஆவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் அபாரமாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி டி20 தொடரை 1-1 என சமன் செய்தது.

இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் இந்த ஆட்டத்தின் ஆட்ட நாயகனாகவும், தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறுகையில் , 'இந்த தொடர் முழுவதுமே நாங்கள் பயமற்ற ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்தோம். அந்த வகையில் இந்த போட்டியிலும் முதலில் பேட்டிங் செய்து பெரிய அளவில் ரன்களை குவித்ததால் எங்களால் சிறப்பாக செயல்பட முடிந்தது. நான் அடித்த இந்த சதம், வெற்றி பெறும்போது வந்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்று குல்தீப் யாதவ் பந்துவீசிய விதம் மகிழ்ச்சியாக இருந்தது. அவர் எப்பொழுதுமே விக்கெட் வீழ்த்த வேண்டும் என்ற வேட்கை கொண்டவர். பிறந்தநாள் அன்று அவர் அவருக்கே சிறந்த பரிசினை கொடுத்துக்கொண்டார். இனிவரும் தொடர்களிலும் இதே போன்ற செயல்பாட்டை வெளிப்படுத்தி வெற்றி காண்போம்' என்று கூறினார்.


Next Story