டி 20 உலகக் கோப்பை தொடரை நாங்கள் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளோம் - ரவிச்சந்திரன் அஸ்வின்


டி 20 உலகக் கோப்பை தொடரை நாங்கள் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளோம் - ரவிச்சந்திரன் அஸ்வின்
x

ஆஸ்திரேலியாவுக்கு சீக்கிரமாக வந்ததன் நோக்கம் வேகம் மற்றும் பவுன்ஸர்களுக்கு பழகுவதற்கு தான் என ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.


8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. நவம்பர் 13-ந்தேதி வரை 7 நகரங்களில் நடைபெறும் இந்த போட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. இதில் முதல் சுற்றில் 8 அணிகள் விளையாடும்.

அவற்றில் இருந்து 4 அணிகள் சூப்பர்12 சுற்றுக்கு தகுதி பெறும். இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய அணிகள் நேரடியாக சூப்பர்12 சுற்றில் விளையாட உள்ளன. மொத்தம் 45 ஆட்டங்கள் நடக்கின்றன.

இந்த உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியதாவது:-

இந்தியாவில் நடைபெறும் டி 20 போட்டிகளிலும், சர்வதேச இருதரப்பு டி 20 தொடர்களிலும் பேட்ஸ்மேன்கள் மைதானத்தை சுற்றிலும் பந்துகளை அடித்து நொறுக்குவார்கள் என்று கூறுவது நியாயமானதுதான். ஏனெனில் இந்தியாவில் உள்ள ஆடுகளங்கள் சிறியவை. 30 அடி வட்டத்துக்கு அருகிலேயே எல்லைக்கோடு உள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆனால் அதேவேளையில் ஆஸ்திரேலியாவில் மைதானத்தின் அளவுகள் பெரியவை. எல்லைக்கோடும் தூரமாக இருக்கும். இது பந்து வீச்சாளர்கள் வேலை செய்வதற்கான உரிமத்தை கொடுக்கும். எந்த நீளத்தில் பந்து வீச வேண்டும் என்பதை அறிந்திருப்பதும் முக்கியம்.

2 வாரங்களுக்கு முன்னதாகவே ஆஸ்திரேலியா வந்துவிட்டோம். டி 20 உலகக் கோப்பை தொடரை நாங்கள் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளோம். இதற்கு முன்னர் ஆஸ்திரேலியாவில் இதுபோன்று நாங்கள் நேரத்தை செலவிட்டது கிடையாது. சூழ்நிலையை தகவமைத்து கொள்வதற்காகவே இந்த ஏற்பாடு.முக்கியமாக நாங்கள் சீக்கிரம் இங்கு வந்ததன் நோக்கமே வேகம் மற்றும் பவுன்ஸர்களுக்கு பழகுவதுதான்.

அணியில் புதிதாக ஒருசில வீரர்கள். அவர்கள் இங்குள்ள சூழ்நிலையில் பழகுவதற்கு இது ஒரு சிறந்த நேரமாக இருக்கும். முதல் ஆட்டம் நெருங்கும் நேரத்தில் உற்சாகமாக இருக்க வேண்டும் மற்றும் நிலைமைகள் என்னவாக இருக்கும் என்பதில் உறுதியாக இருக்கவேண்டும்" என்றார்.


Next Story