ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணியின் அடுத்த கேப்டன் யார்? - பின்ச் தகவல்


ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணியின் அடுத்த கேப்டன் யார்? - பின்ச் தகவல்
x

ஸ்டீவ் ஸ்மித்தை ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக நியமனம் செய்வதில் எந்தப் பிரச்சனையும் இல்லை எனக் கூறியுள்ளார்.


ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். இன்று நடைபெற உள்ள நியூசிலாந்துடனான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியுடன் ஆரோன் பிஞ்ச் ஓய்வு பெறவுள்ளார்.

2013-ம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான ஆரோன் பிஞ்ச் இதுவரை 145 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். 17 சதங்கள், 30 அரை சதங்கள் உள்பட 5,401 ரன்கள் எடுத்துள்ளார். இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் அடுத்த கேப்டன் பற்றி ஆரோன் பின்ச் கருத்து தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது,

ஸ்மித் மீண்டும் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஆவதில் கேப்டவுன் டெஸ்ட் விவகாரம் தடையாக இருக்கும் என நான் நினைக்கவில்லை. டெஸ்ட் கேப்டன் கம்மின்ஸ் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டபோது அடிலெய்ட் ஆஷஸ் டெஸ்டில் ஸ்மித் கேப்டனாக செயல்பட்டார். எனவே பழைய விஷயங்கள் எல்லாம் முடிந்துவிட்டன என நினைக்கிறேன்.

வார்னர் கேப்டனாகச் செயல்பட்டபோது சில ஆட்டங்களில் அவருடன் விளையாடினேன். ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாவதற்கான வாழ்நாள் தடையை வார்னர் எதிர்கொண்டுள்ளார். இது நீக்கப்பட வேண்டும். ஒரு வீரராக மட்டுமல்லாமல் இளைஞர்களுக்குச் சிறந்த பயிற்சியாளராகவும் அவரால் செயல்பட முடியும். இது முக்கியமானது என்றார்.

2018-ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சொரசொரப்பு தன்மை கொண்ட பொருளை வைத்து பந்தைச் சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக ஸ்மித், வார்னர் இருவருக்கும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் ஓராண்டு தடை விதித்தது. மற்றொரு வீரர் பான்கிராப்ட்க்கு 9 மாத காலம் தடை விதித்தது. அந்த சம்பவத்தை அடுத்து ஸ்மித்தின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டது. இரு ஆண்டுகள் கேப்டன் பதவியை வகிக்கவும் அவருக்குத் தடை விதிக்கப்பட்டது. வார்னர் கேப்டனாவதற்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story