மகளிர் ஒருநாள் கிரிக்கெட்; வங்காளதேசத்திற்கு எதிரான தொடரை முழுமையாக கைப்பற்றிய ஆஸ்திரேலியா


மகளிர் ஒருநாள் கிரிக்கெட்; வங்காளதேசத்திற்கு எதிரான தொடரை முழுமையாக கைப்பற்றிய ஆஸ்திரேலியா
x

Image Courtesy: ICC Twitter

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் 31ம் தேதி தொடங்குகிறது.

டாக்கா,

ஆஸ்திரேலிய மகளிரி கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் 2 போட்டிகள் 2-0 என ஆஸ்திரேலியா முன்னிலையில் இருந்தது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3 மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய வங்காளதேசம் ஆஸ்திரேலியாவின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 26.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 89 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் கிம் கார்த், கார்ட்னெட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து 90 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 18.3 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 93 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 3-0 என முழுமையாக கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் 31ம் தேதி தொடங்குகிறது.


Next Story