உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: இந்திய வீரர்கள் இன்று லண்டன் பயணம்


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: இந்திய வீரர்கள் இன்று லண்டன் பயணம்
x

கோப்புப்படம் 

இந்திய வீரர்களை முன்கூட்டியே இங்கிலாந்துக்கு அனுப்ப இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவலில் அடுத்த மாதம் (ஜூன்) 7-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கு சிறந்த முறையில் தயாராகும் வகையில் இந்திய வீரர்களை முன்கூட்டியே இங்கிலாந்துக்கு அனுப்ப இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.

இதன்படி முதற்கட்டமாக, ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு அணி லீக் சுற்றுடன் வெளியேறி விட்டதால் அந்த அணியில் அங்கம் வகித்த இந்திய வீரர்கள் விராட் கோலி, முகமது சிராஜ் ஆகியோர் இன்று காலை லண்டன் புறப்பட்டு செல்கிறார்கள். இதே போல் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆர்.அஸ்வின், அக்ஷர் பட்டேல், ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாக்குர் மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோரும் அதே விமானத்தில் செல்கிறார்கள்.

ஐ.பி.எல். பிளே-ஆப் சுற்றில் விளையாடும் கேப்டன் ரோகித் சர்மா, இஷான் கிஷன், சுப்மன் கில், முகமது ஷமி, கே.எஸ்.பரத், அஜிங்யா ரஹானே, ரவீந்திர ஜடேஜா தங்களுக்குரிய ஆட்டங்கள் முடிந்ததும் கிளம்புவார்கள். ஏற்கனவே இங்கிலாந்துக்கு சென்று விட்ட புஜாரா அங்கு கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story