சிக்கமகளூரு: மனைவியை அடித்து கொன்ற தொழிலாளி கைது

சி்க்கமகளூருவில் மனைவியை அடித்து கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-10-14 18:45 GMT

சிக்கமகளூரு-

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா கிருகுந்தா கிராமத்தை சேர்ந்தவர் சந்துரு (வயது50). இவரது மனைவி பாலாக்சி (42). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சந்துரு அப்பகுதியில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் மனைவி அதேப்பகுதியை சேர்ந்த நபரிடம் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக கூறி அடிக்கடி சந்துரு தகராறு செய்து வந்தார்.

இதனால் அவர்கள் இடையே கடந்த சில நாட்களாக பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் வேலை முடிந்து இரவு சந்துரு வீட்டிற்கு வந்தார். அப்போது மதுகுடித்துவிட்டு அவர் வந்துள்ளார். இதையடுத்து சந்துரு, பாலாக்சி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த சந்துரு அருகில் கோடரியை எடுத்து மனைவியை சரமாரியாக தாக்கினார்.

பின்னர் பாலாக்சியை அவர் வீட்டை விட்டு வெளியே அனுப்பினார். இந்தநிலையில் வீட்டின் வாசல் கதவின் அருகே இரவு பாலாக்சி தூங்கினார். நேற்றுகாலை சந்துரு எழுந்து பார்த்தபோது மனைவி கதவின் அருகே பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அவர் கதறி அழுதார். அவரின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து மூடிகெரே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பார்வையிட்டனர். பின்னர் பாலாக்சியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்துருவை கைது செய்தனர்.

இதுகுறித்து மூடிகெரே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்