போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த அரசு அதிகாரிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை

போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த அரசு அதிகாரிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சிவமொக்கா கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

Update: 2023-10-11 18:45 GMT

சிவமொக்கா-

போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த அரசு அதிகாரிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சிவமொக்கா கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

கருணை அடிப்படையில் வேலை

சிவமொக்கா மாவட்டம் சொரப் தாலுகா சுத்துகோட்டே வட்டார பகுதியில் கூடுதல் வரி வசூல் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் மோகன் குமார். இவரது தந்தை அரசு ஊழியராக பணியாற்றினார். அவர் இறந்துபோன பிறகு கருணை அடிப்படையில் மோகன் குமாருக்கு அஞ்சனாபுரா கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பத்ராபுரா கிராமத்தில் கிராம கணக்காளராக வேலை வழங்கப்பட்டது.

அதையடுத்து அவர் கடந்த 1997-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். பணியில் சேர்ந்தபோது அவர் தனது கல்வி சான்றிதழ், சாதி சான்றிதழ் உள்ளிட்டவற்றையும் சமர்ப்பித்து இருந்தார்.

போலி சான்றிதழ்

மோகன் குமாரின் சாதி சான்றிதழில் 'இந்து போவி' என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் அவர் உள் இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வும் பெற்று அதிகாரியாக இருந்தார். இதையடுத்து மோகன் குமாரின் சாதி சான்றிதழ் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. மேலும் விசாரணையும் நடத்தப்பட்டது.

அப்போது மோகன் குமார் போலி சான்றிதழ் கொடுத்து இருந்ததும், அவரது தந்தையின் சாதி சான்றிதழில் 'கங்காமதா' என்று குறிப்பிடப்பட்டு இருந்ததும் தெரியவந்தது. அதனால் மோகன் குமார் இந்து போவி சமூகத்தைச் சேர்ந்தவர் என்று போலியான சாதி சான்றிதழை சமர்ப்பித்து அதன் அடிப்படையில் பணியில் சேர்ந்தது தெரியவந்தது.

சிறைத்தண்டனை

அதையடுத்து மோகன் குமார் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும் அவர் மீது கடந்த 2010-ம் ஆண்டு சொரப் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அவர் மீது சிவமொக்கா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி யஷ்வந்த் குமார் நேற்று தீர்ப்பு வழங்கினார்.

அவர், போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த குற்றத்திற்காக மோகன் குமாருக்கு 2 ஆண்டு 3 மாதம் சிறைத்தண்டனையும், ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்