மகளை கர்ப்பமாக்கிய; தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

மகளை கர்ப்பமாக்கிய வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-10-20 18:45 GMT

பெங்களூரு -

மகளை கர்ப்பமாக்கிய வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சிறுமி கர்ப்பம்

பெங்களூரு காமாட்சி பாளையா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் ராமு. தொழிலாளி. இவர் தனது மனைவி மற்றும் மகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் ராமு, சிறுமியான தனது மகளை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அடிக்கடி தனது மனைவிக்கு தெரியாமல் மகளை பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து வெளியே யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் ராமு தனது மகளை மிரட்டி உள்ளார். இதனால் அவர் வெளியே யாரிடமும் கூறவில்லை. இந்த நிலையில் சிறுமி கர்ப்பமானார். இதுகுறித்து அவர் தனது தாயிடம் கூறினார். இதைக்கேட்டு அவரது தாய் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் காமாட்சி பாளையா போலீசில் புகார் அளித்தார்.

20 ஆண்டு சிறை

அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராமுவை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு பெங்களூரு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் போலீசார், கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி நேற்று தீர்ப்பு வழங்கினார். அப்போது ராமு மீதான குற்றச்சாட்டு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.7 லட்சம் வழங்க வேண்டும் என்று அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்