இந்தி நடிகர் விவேக் ஓபராயிடம் ரூ.1½ கோடி மோசடி - சினிமா தயாரிப்பாளர் கைது

இந்தி நடிகர் விவேக் ஓபராயிடம் ரூ.1 கோடியே 55 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-10-03 19:45 GMT

மும்பை, 

இந்தி நடிகர் விவேக் ஓபராயிடம் ரூ.1 கோடியே 55 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டார்.

நடிகரிடம் ரூ.1.55 கோடி மோசடி

பிரபல இந்தி நடிகர் விவேக் ஓபராய். இவர் தமிழில் அஜித் நடித்த விவேகம் படத்தில் வில்லனாக நடித்து உள்ளார். இவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சினிமா தயாரிப்பாளர் சஞ்சய் ஷா என்பவர் சந்தித்து பேசினார். அப்போது அவர், படதயாரிப்பு நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று விவேக் ஓபராயிடம் கூறினார். இதை நம்பி விவேக் ஓபராய், சஞ்சய் ஷாவுடன் இணைந்து நிறுவனத்தை தொடங்கினார். அந்த நிறுவனத்தில் சஞ்சய் ஷாவின் மனைவி ராதிகா நந்தா, தாய் நந்திதா ஷா ஆகியோரும் பங்குதாரர்களாக சேர்க்கப்பட்டனர். இந்தநிலையில் நிறுவனத்தின் பணத்தை சஞ்சய் ஷா மற்றும் அவரது மனைவி, தாய் முறைகேடாக பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. அவர்கள் நிறுவன பணத்தை முறைகேடாக பயன்படுத்தி விவேக் ஓபராயிடம் இருந்து ரூ.1 கோடியே 55 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

தயாரிப்பாளர் கைது

இதுகுறித்து விவேக் ஓபராயின் மேலாளர் அளித்த புகாரின் போில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சஞ்சய் ஷாவை கைது செய்து உள்ளனர். மேலும் அவரது மனைவி, தாயை தேடிவருகின்றனர். கைது செய்யப்பட்ட சஞ்சய் ஷாவை போலீசார் 7 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்