கல்வி, வேலைவாய்ப்பில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு 1 சதவீத இட ஒதுக்கீடு- அரசாணை வெளியீடு

கல்வி, வேலைவாய்ப்பில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு 1 சதவீத இடஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

Update: 2023-04-09 18:45 GMT

மும்பை, 

கல்வி, வேலைவாய்ப்பில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு 1 சதவீத இடஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

மராட்டிய அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-

இடஒதுக்கீடு

அரசு மற்றும் தனியார் நடத்தும் ஆதரவற்ற இல்லங்களில் வசிக்கும் 18 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவியருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 1 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும். பெற்றோரை இழந்து உறவினர் வீடுகளில் வாழும் ஆதரவற்ற மாணவ, மாணவியரும் இந்த சலுகையைப் பெறலாம்.

ஆதரவற்ற மாணவ, மாணவியர் ஏ, பி, சி என 3 வகைகளாக பிரிக்கப்படுவர். தாய், தந்தையை இழந்து உறவினர்கள் இல்லாமல் ஆதரவற்றோர் இல்லங்களில் வசிக்கும் சிறார், ஏ பிரிவின் கீழ் சேர்க்கப்படுவர்.

தாய், தந்தையை இழந்து ஆதரவற்றோர் இல்லங்களில் வசிக்கும் சிறார், பி பிரிவிலும், உறவினர்களின் அரவணைப்பில் வளரும் தாய், தந்தையை இழந்த மாணவ, மாணவியர் சி பிரிவிலும் சேர்க்கப்படுவர்.

சாதி சான்று தேவையில்லை

ஆதரவற்ற இல்லங்களின் பொறுப்பாளர் மூலம் இடஒதுக்கீடு உரிமையை கோரலாம். உறவினர்கள் இல்லங்களில் வளரும் ஆதரவற்ற சிறார், மாவட்ட மகளிர், குழந்தைகள் நலத்துறை அதிகாரி மூலம் இடஒதுக்கீடு கோரலாம். இந்த இடஒதுக்கீட்டை பெற சாதி சான்றிதழ் தேவையில்லை. அனைத்து சமூகத்தினரும் இட ஒதுக்கீட்டை பெற முடியும்.

இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மராட்டியத்தில் ஆதரவற்றோர் இல்லங்களில் 4,000 மாணவ, மாணவியர் தங்கியுள்ளனர். உறவினர்களின் வீடுகளில் சுமார் 800 ஆதரவற்ற மாணவ, மாணவியர் உள்ளனர். அவர்கள் அனைவரும் கல்வி, வேலைவாய்ப்பில் ஒரு சதவீத இடஒதுக்கீட்டை பெறலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்