தொழில் அதிபரை கடத்தி ரூ.5 லட்சம் பறித்த 4 பேர் கைது

மும்பை வெர்சோவா பகுதியை சேர்ந்த தொழிலதிபரை கடத்தி ரூ.5 லட்சம் பறித்துச்சென்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-07-12 19:15 GMT

மும்பை, 

மும்பை வெர்சோவா பகுதியை சேர்ந்த தொழிலதிபரை கடந்த 7-ந் தேதி இரவு 6 பேர் கொண்ட கும்பல் அணுகினர். அவர்கள் தங்களை போதைத்தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் எனக்கூறிக்கொண்டு காரில் போதைப்பொருள் கடத்தி செல்வதாக அவரை குற்றம்சாட்டினர். பின்னர் விசாரணைக்கு அழைத்து செல்வதாக கூறி தொழிலதிபரை காரில் கடத்தி சென்றனர். அப்போது ரூ.50 லட்சம் தந்தால் உயிருடன் விடுவதாக மிரட்டினர். இதற்கு மறுப்பு தெரிவித்த தொழிலதிபரிடம் இருந்து ரூ.5 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், பணம், நகைகளை மிரட்டி பறித்து கொண்டு விடுவித்தனர். இதுபற்றி அவர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பணம் பறித்த கும்பலை சேர்ந்த முக்கிய குற்றவாளி தீபக் ஜாதவ் என்பவரை கைது செய்தனர். இதில் தொடர்புடைய மற்றவர்களை பிடிக்க அவரிடம் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் மும்பையில் பதுங்கி இருந்த மேலும் 3 பேரை கைது செய்தனர். அவர்கள் வாசிம் மாவட்டத்தை சேர்ந்த திலிப் மஞ்சுல்கர் (வயது46), மும்பையை சேர்ந்த ருஸ்தம் ஷா (32), சச்சின் மல்கோத்ரா (35) ஆகியோர் என தெரியவந்தது. சச்சின் மல்கோத்ரா ஏற்கனவே டி.என். நகர் போலீஸ் நிலையத்தில் பதிவான வழக்கு ஒன்றில் தேடப்பட்டு வருபவர் என தெரியவந்தது.


Tags:    

மேலும் செய்திகள்