அஜித்பவார் ஒருபோதும் முதல்-மந்திரி ஆக முடியாது- சரத்பவார் பேட்டி

அஜித்பவார் ஒருபோதும் முதல்-மந்திரி ஆக முடியாது என்று சரத்பவார் கூறினார்.

Update: 2023-10-12 18:45 GMT

மும்பை, 

அஜித்பவார் ஒருபோதும் முதல்-மந்திரி ஆக முடியாது என்று சரத்பவார் கூறினார்.

முதல்-மந்திரி பதவி

தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித்பவார் கடந்த ஜூலை மாதம் தனது ஆதரவாளர்களுடன் பா.ஜனதா கூட்டணி அரசில் இணைந்தார். இதன் மூலம் தேசியவாத காங்கிரஸ் 2 ஆக பிளவுப்பட்டு உள்ளது. தாங்கள் தான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் என்று அஜித்பவார் தரப்பு தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டு உள்ளது. இது தொடர்பான விசாரணை தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ளது.

இதற்கிடையே அஜித்பவார் துணை முதல்-மந்திரியான நிலையில் அவருக்கு முதல்-மந்திரி பதவி கிடைக்கும் என்று கூறப்பட்டது குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரிடம் நேற்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது:-

ஒருபோதும் கிடைக்காது

அஜித்பவார் ஒருபோதும் மராட்டியத்தின் முதல்-மந்திரி ஆக முடியாது. அவரால் கனவில் மட்டுமே முதல்-மந்திரியாக முடியும்.

பல்வேறு மாநிலங்களில் கட்சியை உடைத்து பா.ஜனதா ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இருப்பினும் 70 சதவீத மாநிலங்களில் அந்த கட்சி ஆட்சியில் இல்லை. 2024 சட்டமன்ற தேர்தலில் மராட்டியத்திலும் பா.ஜனதா ஆட்சியை இழக்கும்.

ஒரு நேரத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சுப்ரியா சுலேவை சகன் புஜ்பால் முன்மொழிந்தார். ஆனால் அவர் தற்போது வேறு அணிக்கு மாறி உள்ளார். வஞ்சித் பகுஜன் அகாடி கட்சியை இந்தியா கூட்டணியில் சேர்ப்பதற்கு நான் சாதகமாக இருக்கிறேன்.

பா.ஜனதாவில் ஓரங்கட்டப்படும் பங்கஜா முண்டே தனி அணியை உருவாக்கினால், அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

இவ்வாறு சரத்பவார் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்